முல்லைப்பெரியாறு கார்பார்க்கிங் விவகாரம்: இருவர் குழு அமைத்தது பசுமை தீர்ப்பாயம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில், வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முயற்சியை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அதுகுறித்து ஆய்வு செய்வதற்கு இருவர் குழு ஒன்றை அமைத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க கேரளா அரசு திட்டமிட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த தீர்ப்பாயம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே விதித்த தடையை நீக்க தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
மேலும் இது தொடர்பாக தேசிய தலைமை நில அளவையர் மற்றும் வனத் துறை அலுவலர் ஆகிய 2 பேரைக் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்ட தீர்ப்பாயம், இது 6 வார காலத்திற்குள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.