இன்னும் 1000 ஆண்டுகள் உறுதியாக நிற்கும் முல்லைப் பெரியாறு அணை! - நீதிபதி கேடி தாமஸ்
சென்னை: இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணை என நீதிபதி கேடி தாமஸ் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவில் இடம்பெற்றவர் நீதிபதி கேடி தாமஸ்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தமிழக - கேரள மாநில தீராப் பிரச்சினையாகிவிட்டது. இந்த அணை உடைந்துவிடும் என்று தொடர்ந்து கூறி வரும் கேரளா, புதிய அணை கட்டும் முயற்சியில் உள்ளது. ஆனால் அணை வலுவாக இருப்பதை பல நிபுணர்கள் உறுதிப்படுத்திவிட்டனர்.
கேடி தாமஸ்
இந்த நிலையில் அணையை ஆய்வு செய்த நீதிபதி தாமல் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்று பரப்பப்பட்ட பிரச்சாரத்தை நானும் முதலில் நம்பிவிட்டேன்.
1000 ஆண்டுகள் ஆனாலும்..
ஆனால் நிபுணர் குழு அறிக்கையைப் படித்த பிறகுதான் தெளிவு கிடைத்தது. அணையை முறையாகப் பராமரித்தால் இன்னும் 1000 ஆண்டுகள் கூட உறுதியாக இருக்கும். அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
முதல்வர் ஏற்பு
இதுகுறித்து உயர் மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டாம் என கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
மின்சாரத்தில் பங்கு
முல்லைப் பெரியாறு அணையில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் வேண்டுமானால் தமிழகத்திடமிருந்து கேரளா பங்கு கேட்கலாம்," என்றார்.
100 ஆண்டுகள்...
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. பிரிட்டிஷ் அரசு கைவிட்ட நிலையில், அதே நாட்டுப் பொறியாளர் பென்னி குயிக்கின் தீவிர முயற்சியால் உருவான அணை இது.