முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி
குமுளி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பலமாகவும் உள்ளதாக ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு குழு தலைவர் பி.ஆர்.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் பெயரில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் தண்ணீர் தேக்குவதை கண்காணிப்பதற்காக மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது.
இந்த குழுவில் மத்திய அரசின் நீர்வளம் சார்பாக ஒரு அதிகாரியும், கேரளா அரசின் சார்பாக ஒரு பிரதிநிதியும், தமிழக அரசின் சார்பாக பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் அணையின் நீர் மட்டம் உயரும் போதெல்லாம் இந்த குழு அணையை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் பி.ஆர்.கே. பிள்ளை தலைமையில் மூவர் குழுவினர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரனும், கேரளாவின் சார்பில் கேரளா நீர் பாசன கூடுதல் செயலர் குரியன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். புதிதாக பொறுப்பேற்ற இந்தக் குழுவினர் அணையை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் தேக்கடியில் அமைந்துள்ள மேற்பார்வையாளர் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.கே. பிள்ளை, முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதால் எந்த வெள்ளத்தையும் தாங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், 13 மதகுகளும் பழுதில்லாமல் உள்ளதாகவும், கேரள மக்களின் அச்சத்தை போக்குவதற்காகவே, இந்த முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.விரைவில் அணைக்கு மின்சாரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்திய அரசின் உத்தரவுக்கு பிறகு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஆர்.கே. பிள்ளை தெரிவித்தார்.