முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட கேரளா சோதனை
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு ஏற்கனவே, இருமுறை ஆய்வு நடத்தியுள்ளது. இப்பகுதியில் அணை கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை என தெரியவந்தது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின் பேரில், மார்ச் 1 முதல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய அணைக்கு 350 மீட்டர் தூரத்தில், 20 மீட்டர் ஆழத்தில், 13 இடங்களில் பாறை மூன்று இஞ்ச் அளவில் ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
கேரள நீர்பாசன ஆய்வு இன்ஸ்டிடியூட் இயக்குநர் மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் பணிகளை பார்வையிட்டனர். நேற்றுடன் மூன்று இடங்களில் பாறை உறுதித்தன்மை சோதனை முடிவடைந்துள்ளது.
எஞ்சியுள்ள இடங்களில் சோதனைகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க கேரளா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆய்வுக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இதுகுறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், 2010ம் ஆண்டு புதிய அணை ஆய்வுக்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றனர்.