142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்.. விவசாயிகள் கொண்டாட்டம்!
தேனி: 1979ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தொட்டும் கூட அணை 142 அடியை எட்டாமல் இருந்து வந்தது. இதையடுத்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரை பொதுப்பணித்துறையினர் முற்றிலும் நிறுத்தினர் இதையடுத்து வேகமாக உயர்ந்து வந்த நீர்மட்டம் இன்று மாலையில் 142 அடியை எட்டியது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் கடந்த மே 7ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அணை நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியது.
திங்கட்கிழமையன்று, நீர்வரத்து அதிகம் இருந்ததால், நேற்றே அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டும் என, பலரும் கருதினர். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், லோயர்கேம்ப் பகுதிக்கு சென்றனர். ஆனால், நீர்மட்டம், 142 அடியை எட்டாததால், அங்குள்ள மணி மண்டபத்தில், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கொண்டாட்டம்
சென்னை தலைமை செயலகம், பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம், மதுரை மண்டல பொதுப்பணித் துறை அலுவலகத்திலும், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னையில் உள்ள பிரபல கடைகளில், பல கிலோ அளவில் இனிப்புக்கு, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டு உள்ளது.
நள்ளிரவுக்கு முன்பே
முன்னதாக இன்று நள்ளிரவு வாக்கில் 142 அடியை நீர்மட்டம் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலையிலேயே அது நடந்து விட்டது.
நீர்திறப்பு நிறுத்தம்
தற்போது குறைந்த நீர் வரத்தால் 12 மணி நேரத்திற்கு ஒரு புள்ளியே உயரும் நிலை உள்ளது. எனவே நீர் மட்டத்தை வேகமாக 142 அடியாக உயர்த்த குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டிய பிறகு நாதன் தலைமையிலான மூவர் கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
5 ஆவது முறையாக 142 அடி
152 அடி நீர்மட்ட உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில், கடந்த 1972, ஜனவரி 2ஆம் தேதி 142.45 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. 1975, அக்டோபர் 12ஆம் தேதி அணை நீர்மட்டம் 143.30 அடியாக இருந்தது. 1977, நவம்பர் 4ஆம் தேதி அணையில் 146.70 அடி வரையும், 1979, அக்டோபர் 13ஆம் தேதி 143.70 அடி வரையும் தண்ணீர் தேக்கப்பட்டது.
தமிழகம் – கேரளா ஒப்பந்தம்
மத்திய நீர்வள ஆணைய உத்தரவின் பேரில், பெரியாறு அணையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள தமிழக, கேரள அரசுகளிடையே கடந்த 1979, நவம்பர் 25-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதையடுத்து கடந்த 1980-இல் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணி தொடங்கிய நிலையில், அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.
35 ஆண்டுகளுக்குப் பின்னர்
இந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி பெரியாறு அணையில் 136.30 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து, 5-ஆவது முறையாக கடந்த 35 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 142 அடியை எட்டுகிறது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை நியமிக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு, நேற்று மனு செய்தது. இந்நிலையில், பெரியாறு அணை நீர்மட்டம் குறித்து விவாதிக்க, இம்மாதம் 26ம் தேதி கேரள மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட, மாநில அமைச்சரவை நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.