முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளாவின் மறு சீராய்வு மனு டிசம்பர் 2ல் விசாரணை
தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக தமிழகம் உயர்த்தி கொள்ள அனுமதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பின்னர் அணையின் நிர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று கடந்த மே மாதம் 7-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது வழங்கியது.
இந்த தீர்ப்பு வெளியானதும் கேரள அரசு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மறு சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவானது சரியான ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் தவறான ஆவணங்களின் அடிப்படையில் அணை உறுதியாக இருக்கிறது என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. மேலும் தங்களிடம் உள்ள புதிய ஆவணங்களின் அடிப்படையில் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கேரள அரசு தனது மனுவில் கூறியிருந்தது.
இது மட்டுமில்லாமல் மறு சீராய்வு மனுவை வழக்கமான முறையில் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கேரள அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
மறு சீராய்வு மனுவை என்பது நீதிபதிகளின் அறையில் மட்டுமே விசாரணை நடைபெறும் என்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த மறு சீராய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் வழக்கமான முறையில் விசாரிக்க வேண்டும் என்பது கேரள அரசின் கோரிக்கை ஆகும். இந்த மறு சீராய்வு மனு தற்போது டிசம்பர் 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் தற்போது தலைமை நீதிபதியாக இருக்க கூடிய எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்படிப்பு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் அணையில் நீர்வரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த 1979-ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது முல்லை பெரியாறு அணையில் 142 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள கேரளா அரசின் மறுசீராய்வு மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.