அள்ளி வைத்த குப்பையை கொண்டு வந்து கொட்டிய நகராட்சி ஊழியர்கள்.. நாமக்கல்லில் ஒரு அலங்கோலம்!
ஆளுநர் வருகைக்காக சாலைகளில் குப்பை கொட்டப்பட்டது.
Recommended Video
நாமக்கல்: எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் சுத்தமா இருந்தாதான் பிடிக்கும். ஆனால் சுத்தமா இருப்பதுகூட சில நேரங்களில் இடைஞ்சலாக அமைந்துவிடுகிறது. அப்படித்தான் நாமக்கல்லிலும் நடந்திருக்கிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். போகிற இடங்களிலெல்லாம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இப்படித்தான் நேற்றும் ஆளுநர் நாமக்கல் மாவட்டத்துக்கு மக்களின் குறைகளை கேட்க வரப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
நாமக்கல்லுக்கு ஆளுநர் வரப்போகிறார் என்று அதிகாரிகள் சுழன்று சுழன்று வேலைபார்த்தார்கள். மாநகராட்சி சார்பில் அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆளுநர் எங்கெல்லாம் பொதுமக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வந்தததோ, எங்கெல்லாம் செல்ல போகிறார் என்ற விவரங்களை கேட்டு கொண்டு வேகமாக ஊழியர்கள் சுத்தம் செய்ய தொடங்கினர். குறிப்பாக நாமக்கல் பஸ் ஸ்டாண்டு.
நகராட்சி ஊழியர்களின் சீரிய உழைப்பால் பஸ் ஸ்டாண்டு சில மணி நேரங்களில் பளிச் சென்று மாறிவிட்டது. இவ்வளவு சுத்தத்தை கண்டதும் ஆளுநர் அசந்துவிடப் போகிறார் என பொதுமக்களும் நினைத்தனர். ஆனால் ஆளுநர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் தெரியவந்தது, அவர் வருவது தூய்மை இந்தியா திட்டத்திற்காக. குப்பைகளை அகற்றிதான் இந்த திட்டத்துக்கு விழிப்புணர்வை காட்ட முடியும்.
ஆனால் பேருந்து நிலையத்தில்தான் குப்பையே இல்லையே. அதனால் என்ன செய்வதென்றே ஒரு கணம் விழித்த நகராட்சி ஊழியர்கள், சுத்தமாக இருந்த இடத்தில் அள்ளி வைத்த குப்பைகளை மீண்டும் கொண்டு வந்து கொட்ட தொடங்கிவிட்டனர். இந்த சம்பவத்தை ஒருபக்கம் சிரிப்பும், மற்றொரு பக்கம் ஆச்சரியமுமாய் பொதுமக்கள் பார்த்து கொண்டு சென்றனர்.