கழிப்பறை கட்டக்கோரி பயனாளிகள் காலில் விழுந்து கெஞ்சிய நகராட்சி ஆணையர்.. நம்ம புதுச்சேரிலதான்!
புதுச்சேரி அருகே கழிப்பறைக் கட்டக்கோரி நகராட்சி ஆணையர் பயனாளிகளின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி அருகே கழிப்பறைக் கட்டக்கோரி நகராட்சி ஆணையர் பயனாளிகளின் காலில் விழுந்து கெஞ்சினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் வீடுகளில் கழிப்பறை இல்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் அப்பகுதி நகராட்சி ஆணையர் ரமேஷ் ஊழியர்களுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கழிப்பறை வசதி இல்லாத ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து கழிப்பறை கட்டுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அரசின் பணத்தை பெற்றுக்கொண்டு கழிப்பறை கட்டாமல் இருக்கும் நபர்களின் காலில் விழுந்து நகராட்சி ஆணையர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயனாளிகள் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார். நகராட்சி ஆணையருடன் நகராட்சி ஊழியர்களும் பயனாளிகளின் காலில் விழுந்தனர்.
நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களின் காலில் திடீரென விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.