மறைந்தும் தொடர்ந்து முரசொலி படித்து வருகிறார் கருணாநிதி!
கருணாநிதி சமாதியில் தினந்தோறும் முரசொலி நாளிதழ் வைக்கப்படுகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் தினந்தோறும் முரசொலி வைக்கப்பட்டு வருவது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
"முரசொலி நாளிதழ்" - திமுகவின் 'குட்டி அரசியல் மேடை'! திமுகவின் சமுதாய அரங்கம்!! கருணாநிதியின் மனசாட்சி!!! தமிழ் இன உணர்வை அரை நூற்றாண்டுக்கும் போற்றி வளர்த்த போர்வாள்!!!
ரத்தமும்-சதையுமான முரசொலி
தன் செல்ல குழந்தையை போல முரசொலியை மார் மீதும், தோள் மீதும் தூக்கி வளர்த்தவர் கருணாநிதி. பிரசுரம் ஆன முதல் நாளிலிருந்து கடைசி அவர் கண்கள் படாத முரசொலி ஏது? தன் ரத்தமும், சதையுமாய் கலந்து வார்த்தெடுத்த முரசொலிக்காகத்தான் கருணாநிதி தன்னை எப்படியெல்லாம் அர்ப்பணித்து கொண்டார். விடிகாலை காலை 4-30 மணி என்றாலே அது முரசொலிக்கான நேரம் அல்லவா?
மழுங்காத வாளின் முனை
தந்தையும்-தனயனும் தனிமையில் கொஞ்சி விளையாடும் நேரமல்லவா? மனத்தாங்கலாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், கற்பனையாகட்டும், கனவாகட்டும், முடிவாகட்டும், எழுச்சியாகட்டும்... எல்லாவற்றையும் கொட்டிவிட உதவிய தோழனல்லவா? திராவிட இயக்கத்தின் போர்வாள் என்றாரே.. அந்த வாளின் முனை ஒருபோதும் மழுங்காமல் பார்த்து கொண்டவர் கருணாநிதிதானே?
சமாதியில் முரசொலி
தன் ரத்தத்தில் கலந்துபோன முரசொலியை விட்டு கருணாநிதி இன்று பிரிந்துவிட்டார். ஆனால் தொண்டர்களால் இந்த பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே... அவர்களால் இந்த ஆதங்கத்தை தணிக்க முடியவில்லையே... கருணாநிதி இல்லாத முரசொலியை கற்பனையில் கொண்டு வர முடியவில்லையே... அதனால்தானே தினமும் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் தினசரி முரசொலியை வைத்து விட்டு வருகிறார்கள்.
|
திருப்தியின் வெளிப்பாடு
இப்படி கருணாநிதி தலைமாட்டில் முரசொலி வைக்கப்படுவதை சிலர் மூடநம்பிக்கை என்கின்றனர், சிலர் பகுத்தறிவுவாதியிடம் செய்யக்கூடிய காரியமா இது என்கின்றனர். சிலர், கருணாநிதி என்ன ஆவியாக வந்து படிக்க போகிறாரா என கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்... கருணாநிதி சமாதியில் முரசொலி வைக்கப்படுவது தொண்டர்களின் திருப்தியின் வெளிப்பாடு.
இயற்கைக்குகூட கிடையாது
முரசொலிக்கும்-கருணாநிதிக்கும் உள்ள நெருக்கம் ஏதாவது ஒரு ரூபத்தில் ஒன்றுகலந்துதான் இருக்கும். அதை பிரித்து பார்க்கும் உரிமை இயற்கைக்கூட கிடையாது.