சுபாஷ் பண்ணையார் உயிருக்கு ஆபத்து.. நீதிமன்றம் வரும்போது கொல்ல சதி.. உளவுத்துறை உஷார்
நெல்லை: சிங்காரம் கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையாரை சிறையில் கொல்ல சதி திட்டம் திட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலை சேர்ந்தவர் சுபாஷ் பண்ணையார். இவர் மீது அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் உள்ளிட்ட பல கொலை வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே புல்லாவெளியை சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர் சிங்கராம் என்பவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வரும் போது போலீசாரை தாக்கி நான்கு வழி சாலையில் வைத்து வெட்டி கொன்றனர். இதில் சுபாஷ் பண்ணையாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
பல நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் சரண் அடைந்தார். இதில் அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி அவர் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சுபாஷ் பண்ணையாரை தீர்த்து கட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் திட்டம் திட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வரும் 26ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வரும் போது இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. பாளை மத்திய சிறையில் இருக்கும் பசுபதி பாண்டியன் கூட்டாளிகள் இந்த திட்டத்தை தீட்டியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிங்காரம் கொலை பாணியில் இதை செய்ய திட்டமிட்டுருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.