தொழில் அதிபர் கொலையில் கைதான ஐ.பெரியசாமியின் மகளுக்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி!
திருச்சி: ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் நெஞ்சுவலி காரணமாக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது. மதுரை முரட்டன்பத்திரி பகுதியிலுள்ள இவரது நிலத்தை வாங்க சிலர் ஜமால்முகமதுவிடம் ரூ.35 லட்சம் முன்தொகை அளித்துள்ளனர், ஆனால், பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து தராமல் இழுத்தடித்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் ஜமால்முகமதுவைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
அப்போது மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஜமால்முகமதுவை கொலை செய்ததாகக் கூறி, மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி சரண் அடைந்தார்.
இதுகுறித்த விசாரணையில் ஜெயில் ரோட்டில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்ட சிலரது பெயரில் பதிவுசெய்து தர மறுத்ததால் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் மூலம் பாலியல் ஆசை காட்டி ஜமால் முகமதுவை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
ஐ.பெரியசாமியின் குடும்பம்
இந்நிலையில், இந்தக் கொலையின் பின்னணியில் ஐ.பெரியசாமியின் குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு அமைப்புகள் மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயில் ரோட்டில் அலாவுதீன் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள அந்த இடத்தின் 20 சென்ட் நிலத்தை ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா (35), உறவினர் பழனிவேலு(55), அவரது மனைவி உமாராணி(51) ஆகியோர் பெயரில் பதிவு செய்ய ஜமால்முகமதுவிடம் பத்திரத்தில் கையெழுத்து பெற்றிருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில்
இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் அழைத்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேர விசாரணையில், தொழிலதிபர் ஜமால் முகமது இறப்பதற்கு முன்பாக இந்திரா மற்றும் உமாராணிக்கு, ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தாகவும், அதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஜமால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்த போலீஸார், இந்த வழக்கில் கொலை மற்றும் ஆள்கடத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்திரா, உமாராணி, பழனிவேலு ஆகிய மூவர் மீதும், வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
பெரியசாமி மகள் கைது
கைது செய்யப்பட்ட பெரியசாமியின் மகள் இந்திராவையும், உமாராணியையும் திருச்சி பெண்கள் சிறையில் அடைப்பதற்காக மதுரையிலிருந்து திருச்சிக்கு வேனில் அழைத்துவரப்பட்டனர். அந்த வாகனத்தை பின் தொடர்ந்து ஐ.பெரியசாமியின் மகனான ஐ.பி.செந்தில்குமாரும் அவரது ஆதரவாளர்களும் திருச்சி வரை வந்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில்
இந்நிலையில், வரும் வழியில் இந்திராவும் உமாராணியும் நெஞ்சு வலிப்பதாக போலீஸ் அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்கள். இதையடுத்து, அவர்கள் இருவரையும் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
நெஞ்சுவலி உறுதி
சரியாக 9.10க்கு மருத்துவமனைக்குள் வந்த அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உமாராணிக்கு நெஞ்சு வலி இருப்பதை உறுதி செய்தனர். மேலும், இந்திராவிற்கு தொடர்ந்து பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் இருவரையும் மருத்துவமனையின் உள்நோயாளியாக அனுமதித்தனர்.
திமுகவினர் மிரட்டல்
மதுரையில் கைது செய்யப்பட்ட இந்திராவையும், உமாராணியையும் மதுரை பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது, வேனை மூடி மறைத்த ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள், திருச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களையும், பத்திரிகையாளர்களையும் வெளிப்படையாகவே மிரட்டினார்கள். அதன் பிறகு போலீசார் அங்கு குவிக்கப்பட அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.