சுவாதி, ரஞ்சித்... நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கொலைகளால் பீதி- சட்டம் ஒழுங்கு இருக்கா?
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சுவாதி கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரஞ்சித் என்பவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
சென்னை: புற நகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பற்றவையாக இருப்பதாக மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் நகரின் நகரின் மையப்பகுதியான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அடிக்கடி நடைபெறும் கொலை சம்பவங்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று இரவு ரஞ்சித் என்ற மாணவரின் உடல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்த வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக வடபழனியை சேர்ந்த கார்த்தி, நவீன் குமார் மற்றும் போரூரை சேர்ந்த சிவகணேஷ் ஆகியோரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுவாதி கொலை
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று சுவாதி என்ற இளம்பெண் வழக்கமான பணிக்கு செல்வதற்காக வந்த போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிகாலை 6 மணிக்கு வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் செங்கோட்டை, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரைக் கைது செய்தது போலீஸ். புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார்.
பரப்பான கொலை
சுவாதி கொலையும், ராம்குமார் தற்கொலையும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவாதி கொலையாளியை கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது காரணம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததே. ரயில் நிலையத்தின் அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தே ராம்குமாரை கைது செய்தனர்.
இளைஞர் வெட்டிக்கொலை
சுவாதி கொலை செய்யப்பட்டு ஓராண்டுகளுக்கு மேலாகியும் சிசிடிவி கேமரா பொறுத்தப்படவில்லை. இந்தநிலையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று இரவு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர் ரஞ்சித்தை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக ரஞ்சித் ஓடியும் விடாமல் விரட்டி கொலை செய்துள்ளனர்.
பதிவான காட்சிகள்
லயோலா வளாகத்திற்கு எதிரே உள்ள குளக்கரை சாலை 2வது தெரு முதல் ஷெனாய் சாலை சந்திப்பில் ரஞ்சித் இறந்து கிடக்கும் இடம் வரை ரத்தம் சிதறி இருந்தது. எனவே போலீஸார் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் சிலர் ரஞ்சித்தை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தது
3 பேர் கைது
இந்த கொலைக்கு, முன்விரோதம் காரணமா, காதல் தகராறு காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,வடபழனியை சேர்ந்த கார்த்தி, நவீன் குமார் மற்றும் போரூரை சேர்ந்த சிவகணேஷ் ஆகியோரை இன்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் கொலைகள்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை சக்கரபாணி தெருவில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுடன் தங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருநகரம் சென்னை
பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரம் ஒன்றை கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை உட்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்கள் இருந்தன. இதில், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ள நகரமாக சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 135 காவல் நிலையங்களிலும் ஒரு காவல் நிலையத்துக்கு 4 செக்டார் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் கிரேட்டர் சென்னை காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன். தொடர்ச்சியாக நகரின் மையப்பகுதிகளிலும், புறநகர் ரயில் நிலையங்களிலும் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.