குடும்பத்தோடு கொன்று விடுவோம்.. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்ற நீதிபதிக்கு மிரட்டல்!
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி எம் சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி எம் சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
அவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து மற்ற 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அந்த 18 பேரும், சபாநாயகரின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அண்மையில் தீர்ப்பு
இந்த வழக்கை ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இருமாறுப்பட்ட தீர்ப்பு
அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான எம்.சுந்தர், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.
தினகரன் தரப்பு எதிர்ப்பு
நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி விமலாவை மாற்றக்கோரி தினகரன் தரப்பு வழக்கு தொடர்ந்தது.
சத்தியநாராயணன் விசாரணை
இதையடுத்து நீதிபதி சத்தியநாராயணனை பரிந்துரை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகிறார்.
கொலை செய்து விடுவோம்
இந்நிலையில் நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், "18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு அளித்த உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம்" என்று எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கமிஷனருக்கு கோரிக்கை
இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி சுந்தர், அந்த கடிதத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக கமிஷனர் விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
தலைமை நீதிபதியின் கோரிக்கையை தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்து இருக்கும் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி எம்.சுந்தரின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
நீதிபதிகள் அதிர்ச்சி
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கடிதம் எழுதிய நபரையும் தேடி வருகின்றனர். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நீதிபதிகள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.