சரமாரி கொலைகள்.. சங்கடத்தில் போலீஸ்... அச்சத்தில் மக்கள்.. இது நம்ம சென்னை!
சென்னை: சென்னையில் அடுத்தடுத்து பயங்கரக் கொலைகள் நடந்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. கிட்டத்தட்ட தினசரி ஒரு கொலை என்ற அளவில் கொலைகள் பெருகி வருவதால் மக்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் வாழும் நிலைக்குத் தள்ளி வருகிறது.
சமீப காலத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்து விட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பிடிபட்டு விட்டனர் என்றாலும் கூட கொலைகள் நின்றபாடில்லை என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
மே 30ம் தேதி சென்னை எழும்பூரில் பிரபல பெண் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோகினி என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது கை கால்களைக் கட்டிப் போட்டு கொடூரமாக கொன்றிருந்தனர். இதுதொடர்பான குற்றவாளிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர். ரோகினியிடமிருந்து பணம் பறிப்பதற்காக இந்தக் கொலையைச் செய்ததாக கொலையாளிகள் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலைக்கு சில நாட்களுக்கு முன்புதான் அதே எழும்பூர் பகுதியில் சாந்தா என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். அதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஜூன் 5ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் என்பவர் பட்டப் பகலில் கொல்லப்பட்டார். அவரை கொலையாளிகள் சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டுத் தப்பினர். கடைசியில் இந்தக் கொலைக்கு முருகனின் மனைவி லோகேஸ்வரிதான் காரணம் என்று தெரிய வந்தது. அவரையும், கொலையாளிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இன்னொரு கொலை நடந்துள்ளது. மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவரும், நிதி நிறுவனம் நடத்தி வருபவரும், ஆர்டிஐ ஆர்வலருமான பரஸ்மால் என்பவர் பெரியமேடு பகுதியில் படு கொலை செய்யப்படடுள்ளார். இவரை பேக்கர் தெருவில் வைத்து கொலையாளிகள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். 58 வயதான பரஸ்மாலை 4 பேர் கொண்ட கும்பல் அவர் பைக்கில் சென்றபோது வழிமறித்து வெட்டிக் கொன்றது.
இவர் ஆர்டிஐ மூலம் பலருக்கு குடைச்சல் கொடுத்து வந்ததால் அவர்களில் யாரேனும் ஆட்களை ஏவி கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இப்படி அடுத்தடுத்து சென்னையில் கொலைகள் பெருகி வருவதால் மக்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.