மாட்டிறைச்சி சர்ச்சைக்கு பதிலடி..சிக்கன் விற்பனைக்கு தடை கேட்கிறது 'முருக பக்தர்கள் முன்னேற்ற சங்கம்
சென்னை: பெரும்பான்மை இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக கூறி, மாட்டிறைச்சிக்கு தடை கேட்டு வட இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும், சில அரசியல்வாதிகளும் சர்ச்சை கிளப்பிவருகின்றனர்.
பசு என்பது இந்துக்களுக்கு புனிதமானது என்பதை காரணமாக கூறி, தடை கேட்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாட்டிறைச்சி சர்ச்சை நாடு முழுவதிலும் உச்சத்தில் உள்ளது.
இதை கேலி செய்யும்விதமாக, சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஒரு படம் பரவிவருகிறது.
அந்த படத்தில் முருகப்பெருமான் கையில் சேவற்கொடியோடு காட்சியளிக்கிறார். முருகரின் படத்துக்கு அருகே சேவல் படத்தை தனியாக எடுத்துப்போட்டு, அதன் அருகே, 'கோழி இறைச்சிக்கு தடை வேண்டும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது
படத்தின்கீழே, 'அகில இந்திய முருக பக்தர்கள் முன்னேற்ற சங்கம்' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு எளிதாக புரிந்திருக்கும். முருகப்பெருமானின் கொடியில் சேவல் இருப்பதால், கோழி இறைச்சிக்கு தடை கேட்கிறார்கள் என்பது.
மாட்டிறைச்சி தடை கேட்போரை கிண்டல் செய்வதற்காக, இதுபோல இல்லாத ஒரு சங்கத்தை உருவாக்கி, படத்தை உலவ விட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலும், சேவல் கறியை யாரும் உண்பதில்லை. பிராய்லரில் பெட்டைக்கோழி கறிதான் விற்பனை செய்யப்படும் என்பதை அவர்கள் கவனிக்கவில்லை போலும்.