"ஓம் முருகா" ஆன நளினி முருகன்...!
வேலூர்: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கி் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை ரத்துக்காக காத்திருக்கும் முருகன் கிட்டத்தட்ட சாமியார் போல ஆகி விட்டாராம். தனது அறைக்குள் எப்போதும் பூஜையில் ஈடுபட்டு வரும் அவர் சாமியார் போல நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நளினியின் கணவர்தான் முருகன். தனது கணவர் இப்படி திடீர் என சாமியாராக மாறியிருப்பதால் நளினி அதிர்ச்சி அடைந்துள்ளாராம். ஆனால் அது அறியாமையின் தவிப்பு என்று சொல்கிறார் முருகன்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் இதுகுறித்து விகடனுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து....
முருகனுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்
இதற்கான விதை, நான் பிறந்த இத்தாவில் கிராமத்திலேயே விதைக்கப்பட்டு விட்டது. என் தந்தை 12 வயதிலேயே தீட்சை பெற்று, அங்கு உள்ள முருகன் கோயிலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் முழுமையான ஆன்மிகவாதியாக மாறிய பின்னர், பக்தி மார்க்கக் கருமங்களில் எங்களையும் ஈடுபடுத்தினார்.
விவேகானந்தர் போதனைகள்
சிறைக்கு வந்த நாளில் இருந்தே, என் மானசீக ஆன்மிகக் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகளையும் விவேகானந்தரின் போதனைகளையும் படித்துத் தியானித்தபடி இருந்தேன். ஒருகட்டத்தில் என்னை முழுமையாக ஆன்மிகத்துக்குள் இழுப்பது போல உணரவும் பயந்து பின்வாங்கி விட்டேன். பின்னர் கிருஷ்ண பக்தி இயக்க ஸ்வாமிகளான ஜெய கோவிந்ததாஸ் அவர்களின் போதனைகள், என்னை மீண்டும் ஆன்மிகத்துக்குள் அழைத்துச் சென்றன.
அறியாமையில் உழன்று வந்தேன்
இதுவரை நான் வாழ்ந்த வாழ்வில் என் விருப்பங்கள், ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் போனாலும்கூட, அதை வாழ்க்கை என நம்பி எதிர்நீச்சல் எனும் அறியாமையில் உழன்று கொண்டிருந்தேன். ஆனால், இப்போது பரவசமான ஓர் உலகத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். கடலைச் சேரும் நதியில் சத்தம் இல்லாமல் நடனமாடிப் போகும் ஓர் இலை போல மென்மையானவனாக என்னை உணர்கிறேன்!
எனது மனைவிக்குப் பிடிக்கவில்லை
கணவன் துறவறம் மேற்கொள்வதை, எந்த மனைவியும் விரும்ப மாட்டார். மகளும் அப்படித்தான். அவர்களைச் சமாதானப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. என் மனைவியும் தினசரி தியானத்தில் ஈடுபடுகிறவர்தான். ஆனாலும், என் ஆன்மிகப் பயண வேகத்தைக் குறைக்கப் போராடுகிறார். அது அறியாமையின் தவிப்பு. துறவறம் என்பது, குடும்பத்தை விட்டு ஓடுவது அல்ல. அதை அவரும் புரிந்து கொள்ளும் நாள் விரைவில் வரும்!
பின்வாங்க மாட்டேன்
என் ஆன்மிக வாழ்வில் இருந்து நான் இனி விலகவோ, பின்வாங்கவோ முடியாது. ஏனென்றால், திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு வெகுதூரம் வந்துவிட்டேன். ஆனால், என் மகள், என் சகோதரர்கள், உறவினர்கள் துணைகொண்டு என்னை திசை திருப்பலாம் என நினைக்கிறார் நளினி. எல்லாம் அவன் செயல்!