பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: முருகன், கருப்பசாமிக்கு மே 14 வரை நீதிமன்ற காவல்
முருகன், கருப்பசாமிக்கு மே 14 வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இதில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், முருகன், மற்றும் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகளின் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அவர்களது காவல் முடிவடைந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜபர்படுத்துவதற்காக அவர்கள் இருவரையும் சிபிசிஐடி அதிகாரிகள் அழைத்து சென்றனர். ஆனால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தால் நீதிபதி பரமசிவம் வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, விருதுநகர் சிறையிலையே தங்களை அடைக்க வேண்டும் எனவும், மதுரையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் முருகனும், கருப்பசாமியும் கேட்டுக் கொண்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதி பரமசிவம், விருதுநகர் சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.