இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் தகனம்: திரையுலகினர் கண்ணீருடன் பிரியாவிடை!
உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்றுக் காலமான கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை: மறைந்த கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணவின் உடல் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று மாலை மரணமடைந்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
மறைந்த பாலமுரளி கிருஷ்ணா உலகளவில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 25ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் பங்கேற்றுள்ளார். ஏராளமான திரைப்பட பாடல்களையும் பாடியுள்ள பாலமுரளி கிருஷ்ணா சிறந்த இசையமைப்பாளரும் ஆவார். பாலமுரளி கிருஷ்ணாவின் சாதனைகளை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதையும் அவர் பெற்றுள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகருக்காக 2 முறை தேசிய விருதுகளையும் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ளார். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி போன்ற பட்டங்களுக்கும் அவர் சொந்தக்காரர் ஆவர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட பாலமுரளி கிருஷ்ணாவின் உடலுக்கு திரை மற்றும் இசை உலகினர், அரசியல் கட்சியினர், பொது மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிலிருந்து பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இறுதி சடங்குக்குப் பின் பாலமுரளி கிருஷ்ணாவின் பூதஉடல் தகனம் செய்யப்பட்டது.