பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு திரட்டும் இஸ்லாமிய அமைப்புகள்.. ஸ்டாலின், விஜயகாந்த்துடன் சந்திப்பு
சென்னை: பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் வேலையில், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஈடுபட்டு வருகிறார். எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை இதுகுறித்து இன்று அவர் சந்தித்து ஆதரவு கோரினார். அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட உள்ள பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், அனைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இஸ்லாமியக் கூட்டமைப்பினர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தங்களது போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவு கிடைத்துள்ளதாகக் கூறினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவைக் கோரினார்.
"சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கினைப்பாளர் திரு.முகமது ஹனிபா, மாநில தலைவர் WPG கட்சி எஸ்.எம்.சிக்கந்தர், மாநில தலைவர் எஸ்.டி.பி.ஐ.கட்சி கே.கே.எஸ்.எம்.தெக்லான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் திரு.ஜவஹிருல்லா,Ex:MLA., மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் திரு.உமர்பாரூக், உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர், மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளையும் தடுக்க, சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆதரவு கோரினர்" என்று தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.