ரஜினிகாந்த் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும்: இந்திய தேசிய லீக் மனு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு, நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருமானவரித் துறையினர் கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் ஹரீம் மனு அளித்துள்ளார்.
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் வீடுகள், நகைக்கடைகள், ரியல் எஸ்டேட் அலுவலகங்களில் சோதனை நடத்தினால் ஏராளமான கருப்பு பணத்தை மீட்க முடியும் என்று தெரிவித்தார்.
500,1000 ரூபாய் நோட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை ரஜினிகாந்த் வரவேற்றிருந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் படத்தயாரிப்பாளருமான அமீர், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தமைக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் தேசிய ஒருமைப்பாடு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
கடந்த காலங்களில் இந்தியா பல்வேறு இடர்களையும் அநீதிகளையும் சந்தித்தபோதெல்லாம் ரஜினிகாந்த ஒரு அறிக்கைக் கூட வெளியிட்டது இல்லை என்றும் அவர் கடுமையாக சாடிப்பேசினார். தற்போது பணத்தாள்கள் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் நீண்ட கால நட்பின் அடிப்படையில் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ரஜினி. சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் கபாலி பட டிக்கெட் அரசு விதிமுறைகளுக்கு மாறாக அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
தற்போது, புதிய இந்தியா பிறந்துள்ளது என்றும், தங்கள் கபாலி படம் பழைய இந்தியாவிலா வெளியானது என்றும் அமீர் கேள்வி எழுப்பினார். கபாலி படத்துக்கு வெள்ளைப் பணமாகவும், கருப்பு பணமாகவும் தாங்கள் பெற்ற சம்பளம் குறித்த விவரங்களையும், கபாலி பட பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் சமர்பிக்க முடியுமா என்றும் அவர் வினவினார்.
கடந்த வாரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய இந்தியா பிறந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.