முஸ்லீம்கள் பாஜகவை நம்புகின்றனர்.. தமிழிசை சொல்வதைக் கேளுங்க!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 325 இடங்களில் வெற்றி பெற்றதற்கு முஸ்லீம்கள் பாஜகவை நம்புவதே காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: பாஜக ஆட்சியில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் முஸ்லீம்கள் பாஜகவை நம்புகிறார்கள். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றி கிடைத்தது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள். 384 இடங்களில் பாஜக போட்டியிட்டது அதில் 325 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக போட்டியிட்ட 384 தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லீம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பாகஜவின் இந்தப் போக்கு, 'நாங்கள் என்ன கொடுக்கிறோமோ அதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என முஸ்லீம்களைப் பார்த்துக் கூறுவதாக உள்ளது என இடதுசாரிகள் விமர்சித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக ஆட்சியில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். முஸ்லீம்கள் முழுமையாக பாஜகவை நம்புகிறார்கள். அதன் எதிரொலிதான் இந்த வெற்றி.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி இதுவரை முஸ்லீம்களின் ஆதரவு தனக்கிருப்பதாகக் கூறி அரசியல் செய்தார். அவரைப் போலவே தொல். திருமாவளவனும் தழிழகத்தில் முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்ய முயற்சித்தார். இனி அவர்களால் முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதைத்தான் இந்த வெற்றி அவர்களுக்கு உணர்த்துகிறது என்றார் தமிழிசை.