முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு... பேரா. கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3.5 சதவீத தனி உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத்தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத்தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒருவர் முஸ்லிமாக மாறும்போது அவர் இஸ்லாம் எனும் பெரும் சமூகத்தில் ஓர் அங்கமாக மாறி விடுகிறார். இஸ்லாத்தில் சாதியும் கிடையாது, சாதி அடிப்படையிலான பாரபட்சமும் கிடையாது.
இந்தியாவில் முஸ்லிம்கள் பொருளாதார, கல்வி மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர். இஸ்லாத்தில் சேரும் தலித் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் வேண்டும் என்பதை ஏற்கக் கூடாது.
அவ்வாறு ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தில் சாதி உள்ளதாக ஒப்புக் கொண்டதாக ஆகி விடும். அரசியல் சாசனத்தின்படி மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டதாது என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரினோம்.
மத்திய அரசு, லெப்பை, தக்னீ, மாப்பிள்ளை மற்றும் தூதேகுலா ஆகிய நான்கு பிரிவுகளையும், தமிழக அரசுமேற்கண்ட 4 பிரிவுகளோடு செய்யது, ஷேக், அன்சர் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்து பிற்படுத்தப்பட வகுப்பினராக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீத தனி உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பிரத்யேகமாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை என்று கூறினார்.