ரம்ஜான் காலத்தில் தேர்தல் நடத்தக் கூடாது.. அரவக்குறிச்சி முஸ்லீம்கள் எதிர்ப்பு
கரூர்: ரம்ஜான் நோன்பு காலத்தில் தேர்தலை நடத்தக்கூடாது என அரவக்குறிச்சி பகுதி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் நடைபெற இருந்த சட்டசபைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. நாளை இத்தொகுதிகளில் தேர்தல் நடத்துவதாக முன்னர் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், பின்னர் தேர்தல் தேதி ஜூன் 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரம்ரான் நோன்பு காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரவக்குறிச்சி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களின் புனித நோன்பாக கருதப்படுகிறது. இது வருகிற ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் ஜூலை மாதம் 6-ந்தேதி வரை ஒருமாத காலம் கடை பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், இஸ்லாமிய வாக்காளர்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அரவக்குறிச்சி இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளப்பட்டி ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முகமது அலி கூறுகையில், "பள்ளப்பட்டி பேரூராட்சியில் மட்டும் 26 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். மேலும் அரவக்குறிச்சி தொகுதியை சுற்றியுள்ள அரவக்குறிச்சி, மலையக் கோவிலூர், சின்னதாராபுரம், தென்னிலை, ஈசநத்தம், ஜமீன் ஆத்தூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தேர்தல் வரும் நாள் ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் முதியவர்கள் உள்ளிட்ட எவருமே வரிசையில் நின்று வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. அத்துடன் பள்ளப்பட்டியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் அனைத்து கட்சிகள் சார்பிலும் அந்தந்த கட்சிக்குரிய இஸ்லாமியர்களே பூத் ஏஜெண்டாகவும் உள்ளதால் அவர்களும் அப்பணிகளை மேற்கொள்ள முடியாமலும் தவிர்க்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
இதுகுறித்து உலமாக்கள் அமைப்புகள் சார்பிலும் உள்ளோர் என்று அனைத்து தரப்பினரிடமும் கேட்டபோது, நோன்பு காலத்தில் தேர்தல் வருவதை யாருமே விரும்பவில்லை. நோன்பு தொடங்கும் ஜூன் 6-ந்தேதிக்கு முன்பாகவோ அல்லது நோன்பு காலம் முடிவுறும் ஜூலை 6-ந்தேதிக்கு பின்பாகவோ தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி குறிப்பிட்ட ஜூன் 13-ந்தேதி திட்டமிட்டப்படி தேர்தல் நடத்தப்படுமேயானால் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள சுமார் 35 ஆயிரம் இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் போகும் நிலை உள்ளது.
ஏனெனில் பள்ளப்பட்டி பகுதியில் கட்சிகள் பல இருந்தபோதிலும் அனைவருமே ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவே உள்ளனர். எனவே அவர்களும் இதனை ஆமோதிக்கும் வகையில் தான் உள்ளனர். தஞ்சை தொகுதியிலும் சுமார் 25 முதல் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. மேலும் எங்களின் இநத முடிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி, மாவட்ட தேர்தல் அலுவலர் காகர்லா உஷாவுக்கும் மனு அனுப்ப உள்ளோம்.
மேலும் இந்த நிலைப்பாடு குறித்து ஜமாஅத் சார்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கலும் செய்ய ஆலோசித்து வருகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.