சுவாதி கொலையை தடுக்கவும் இல்லை, தகவலும் தரவில்லை: பொதுமக்கள் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியின் வீட்டிற்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி. இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜீனியராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுவாதி கொலை சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக அரசியல் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. கொலை நிகந்த போது கொலையை தடுக்க முயற்சிக்கவும் இல்லை. கொலை குறித்து தகவல் கொடுக்கவும் முன்வரவில்லை என்பது வேதனையானது.
தங்கள் தாய், சகோதரிகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நினைப்பவர்கள், கொலையாளியை பிடிக்க தகவல் அளித்து உதவ வேண்டும். சுவாதி கொலை வழக்கில் போலீஸார் துரிதமாக செயல்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஜாதிய ரீதியில் சர்ச்சையை கிளப்புவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.