கருணாநிதி கைது புகழ் முத்துக்கருப்பன் டிஜிபி ஆனார்...மேலும் இருவருக்கும் பதவி உயர்வு
2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் முத்துக்கருப்பன் ஐ.பி.எஸ். திமுக தலைவர் கருணாநிதியை வீடுபுகுந்து கைது செய்தார். இதனையடுத்து மீண்டும் திமுக ஆட்சி வந்த உடன் 4 ஆண்டுகள் வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்தார்.
இதனையடுத்து 2008ம் ஆண்டு கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மீண்டும் 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு ஊர்க்காவல் படை கூடுதல் டி.ஜி.பி.யாக கே.முத்துக்கருப்பன் பதவி உயர்வு பெற்றார். இப்போது ஊர்க்காவல்படை டி.ஜி.பி.யாக முத்துக்கருப்பனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் போலீஸ் கமிஷனர்
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராக என்.கே.செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையராக ஆர்.திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி இன்று பிறப்பித்துள்ளார்.