முத்துகிருஷ்ணன் உடல் சென்னை வந்தது.. ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது
டெல்லி ஜேஎன்யுவில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டது.
சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயிரிழந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு படித்து வந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன். சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தனது நண்பரின் அறையில் தூக்கியில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
முத்துக்கிருஷ்ணனின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் மற்றும் முத்துக்கிருஷ்ணனின் தந்தை தரப்பு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முத்துக்கிருஷ்ணனின் பெற்றோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தநிலையில் முத்துக்கிருஷ்ணனின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் முத்துக்கிருஷ்ணனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.