முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: ஆவணங்கள் தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டிற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும், முன்னாள் அமைச்சர் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வழக்கு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியில் வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்தவர் முத்துக்குமாரசாமி. டிரைவர்கள் பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்றுத்தருமாறு நெருக்கடி வந்ததால், கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி,20ம் தேதியன்று ரயில்முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். அமைச்சர் பதவி, கட்சிப்பொறுப்பும் பறிக்கப்பட்டது. தற்கொலைக்கு துாண்டுதல், கூட்டுச் சதி, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் மீது சி.பி.சி.ஐ.டி.போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக, நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், 'தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், என் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டியது ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முத்துக்குமாரசாமியிடம் நான் பணம் கேட்டதாக கூறுவதற்கு எந்த சாட்சியும் இல்லை.
தற்காலிக டிரைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களிடம் பணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று முத்துக்குமாரசாமியிடம் நான் கூறியதாக யாரோ சொன்னதாக யூகத்தின் அடிப்படையிலேயே என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி வி.எஸ்.ரவி விசாரித்தார். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், மனுதாரர் வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனது உத்தரவில், ''இவ்வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை மார்ச் 1 ல் தாக்கல் செய்ய வேண்டும்,'' என தெரிவித்தார்.