முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: மதுரை ஹைகோர்ட்டில் சிபிசிஐடி ஆவணங்கள் தாக்கல்
நெல்லை: வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரியாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பணி நியமனம் தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த நெருக்கடி காரணமாகவே முத்துக்குமாரசாமி 2014 பிப்ரவரி 20ல் தச்சநல்லூரில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. இதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிபோனது. அதோடு முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துறை அதிகாரியாக இருந்த செந்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா ஆகியோர் கைது செய்யப்பட்டு நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தன் மீதான குற்றச்சாட்டிற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை எடுத்துரைத்தார்.
இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், தங்கள் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி.எஸ்.ரவி உத்தரவிட்டார்.