முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி
மதுரை: வேளாண் உதவி பொறியாளர் முத்துக்குமாரசாமி, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதே வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த தலைமை பொறியாளர் செந்திலின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் வேளாண்மைதுறையில் அதிகாரியாக பணியாற்றிய முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தச்சநல்லூரில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமீன் மனுக்கள்
நெல்லை நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாயின. இதையடுத்து இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்
இந்த மனுக்கள் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. தலைமை பொறியாளர் செந்தில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிடும்போது, வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வழங்குவதற்காக நெல்லையில் வேளாண் துறையில் ஓட்டுநர்களாக நியமனம் செய்யப்பட்ட 7 பேரிடமும் தலா ரூ.1.50 லட்சம் வீதம் வசூலித்து தரும்படி முத்துகுமாரசாமியை துன்புறுத்தியதாக செந்தில் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செந்தில் பொறுப்பா?
அவ்வாறு மிரட்டியிருந்தால், நியமனங்கள் நியாயமாக நடைபெற்றதாகவும், அதற்கு பணம் தர முடியாது என்றும் மறுத்திருக்கலாம். அல்லது மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கலாம். அதைவிடுத்து தற்கொலை செய்துகொண்டால், அதற்கு செந்தில் எப்படி பொறுப்பாவார்?
ஜாமீன் வழங்க கோரிக்கை
இந்த வழக்கில் செந்திலிடம் முழுமையாக விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதில்லை. இந்த வழக்கில் சாட்சிகள் அனைவரும் அரசுப் பணியில் இருப்பவர்கள். இதனால் சாட்சிகளை கலைக்கும் பேச்சு எழுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
அக்ரிக்கு ஜாமீன்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் கதிர்வேல் வாதிடும்போது, முத்துக்குமாரசாமி தற்கொலைக்கும், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் தொடர்பு இல்லை. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு
இந்த நிலையில், இருவரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் ராமச்சந்திரன் வாதாடுகையில், ‘‘இதுவரை இந்த வழக்கில் 83 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில் இவர்களை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது'' என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரது ஜாமீன் மனுவை நீதிபதி கல்யாண சுந்தரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
காவல் நீட்டிப்பு
இதனிடையே தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 14 வரை காவலை நீட்டித்து நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்திய நீதிபதி ராமலிங்கம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.