என் மகள் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை - வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி தனது மகள் விஜயலட்சுமி எந்த அரசியல் கட்சியிலும் இணையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகள் விஜயலட்சுமி.
அவர் தற்போது தாயார் முத்துலட்சுமியுடன் மேச்சேரியில் வசித்து வருகிறார். முத்துலட்சுமி மலைவாழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பையும், கணவர் வீரப்பன் பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். விஜயலட்சுமி பி.ஏ ஆங்கிலம் முடித்து விட்டு எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவனுடன் கொடியை பிடித்தபடி உள்ள படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து முத்துலட்சுமி கூறுகையில், "நான் சிறையில் அடைக்கப்பட்ட காலகட்டமான 2010 ஆம் ஆண்டு என் மகளுக்கு உதவுவதாக சில அரசியல் கட்சியினர் அழைத்தனர். அப்போது திருமாவளவன் சந்திக்க இருப்பதாக கூறிய சிலர் எனது மகள் விஜயலட்சுமியை அழைத்து சென்றனர். அந்த வேளையில் அவரது கட்சியில் சிலர் இணைந்தனர்.
உதவிக்காக அழைத்தவர்கள் என் மகள் விஜயலட்சுமியையும் மேடையில் ஏற்றி கொடியை பிடிக்கும்படி செய்து விட்டனர். இது 2010 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நாங்கள் தற்போது எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் அமைதியான வழியில் வாழ்க்கை நடத்தி வருகிறோம். நாங்கள் தமிழர்களுக்காக பாடுபட்ட என் கணவர் வீரப்பன் வழியில் அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறோம். மற்றபடி எங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.