ஜெயலலிதாவின் நேரடி பார்வையின் கீழ் வீரப்பன் கொலை… மனைவி முத்துலட்சுமி பகீர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயாலிதாவின் நேரடி பார்வையின் கீழ் வீரப்பன் கொலை செய்யப்பட்டார் என்று அவரது மனைவி முத்துலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். தொழிலதிபர் என்று போலீஸ் அதிகாரி விஜயகுமார் கூறுவதெல்லாம்
தர்மபுரி: போலீஸ் அதிகாரி விஜயகுமார் வெளியிட்டுள்ள புத்தகத்தில் வீரப்பன் என்கவுண்டர் பற்றி கூறியிருப்பது அனைத்தும் பொய் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி என்பது பற்றி சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வீரப்பனை தொழிலதிபர் ஒருவரின் துணையோடு பிடித்ததாகக் கூறியுள்ளார்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முத்துலட்சுமி கூறியுள்ளார். மேலும், தன் கணவரை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு என்கவுண்டர் என்று விஜயகுமார் நாடகம் ஆடுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விஜயகுமாரின் பொய்
தமிழக மக்களை முட்டாளாக்க விஜயகுமார் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார். என் கணவர் செல்வராஜ் என்பவர் மூலம் அனுப்பப்பட்ட ஆட்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பிடிக்கப்பட்டார். இவர்கள் சொல்வது போல் தொழிலதிபர் என்று யாருமில்லை. செல்வராஜ் மூலம் நான்கு போலீசார் வீரப்பனை உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீரப்பனை பிடித்திருக்கிறார்கள்.
திட்டமிட்ட கொலை
எருமைத் தயிரில் மயக்க மருந்து கலந்து அவருக்கு கொடுக்கப்பட்டது. பின்னர், உயிரோடு பிடிக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளைச் செய்து காவல்துறை சாகடித்து பாப்பாரப்பட்டி அருகில், என்கவுண்டர் என்று செட்டப் செய்யப்பட்டது. 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டால் அங்கு ஒரு சொட்டு ரத்தம் கூடவா இருக்காது?
செட்டப் என்கவுண்டர்
உண்மையில் என்கவுண்டர் நடைபெற்று இருந்தால் பத்திரிகையாளர்களை அழைத்து காண்பித்திருக்க வேண்டும். இல்லை என்றால் தர்மபுரியில் இருக்கும் என்னை அழைத்து காட்டியிருக்கலாம். தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை பார்க்க சென்ற என்னை பிடித்து மாலை 6 மணி வரை ஒரு அறையில் பூட்டி வைத்தனர். என்கவுண்டர் உண்மை என்றால் ஏன் அவர்கள் அப்படி செய்ய வேண்டும்?
அறையில் பூட்டி சித்திரவதை
மருத்துவமனையில் அவர்கள் நினைத்த அனைத்தையும் செய்து முடித்த பின்னர், வீரப்பன் உடலை சுற்றிய துணியைக் கூட அவிழ்க்க முடியாதபடி கட்டிக் கொடுத்தார்கள். இதற்கு பிறகு உடலை எரிப்பது, அடக்கம் செய்வது எங்கள் உரிமை. ஆனால் நாங்கள் அடக்கம் செய்யும் இடத்திற்கு செல்வதற்குள், அவரது உடலை எரிக்க டீசல் மற்றும் டயர் ஆகியவற்றை காவல்துறையினர் தயாராக வைத்திருந்தனர்.
மறைக்கப்படும் உண்மை
வீரப்பனை பிடிக்க தொழிலதிபர் ஒருவர் உதவியதாக போலீஸ் அதிகாரி விஜயகுமார் கூறுவது புது கதையாக உள்ளது. உணவு மூலமாகத்தான் வீரப்பன் கொல்லப்பட்டார். இதுதான் உண்மை. இந்த உண்மைகளை நாங்கள் வெளியே சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அனைத்து உண்மைகளும் அவர்களது கட்டுபாட்டில் உள்ளன. அப்பாவிகளாகிய நாங்கள் ஒடுக்கப்பட்டுள்ளோம்.
அதிகாரம் கையில் இருப்பதால் ஏதோ ஒரு கதையை மக்களுக்கு சொல்கிறார் விஜயகுமார். இந்தியாவிலேயே நான் ஒரு பெரிய அதிகாரி என்று பெருமை படுத்திக் காட்டிக் கொள்வதற்காக அவர் இப்படி செய்து வருகிறார்.
யாரையும் நம்பாத வீரப்பன்
வீரப்பன் யாரையும் எளிதில் நம்ப மாட்டார். நம்பி வெளியிலும் வர மாட்டார். அவருடன் நான் இருந்த காலத்தில் கூட, மலையோரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு போகலாம் என்று சொன்னால் அவர் வரமாட்டார். 3 ஆண்டுகள் காட்டில் நான் அவருடன் வாழ்ந்திருந்த அடிப்படையில் இதனை சொல்கிறேன்.
ஜெயலலிதாவின் பார்வையின் கீழ்..
விஜயகுமார் சொல்வது அனைவரையும் முட்டாளாக்கும் வேலை. வீரப்பன் கொலை திட்டமிடப்பட்ட ஒன்று. மோரில் தூக்க மருந்து கலந்து குடிக்க வைத்து பிடித்தனர். பின்னர், அவர் கொல்லப்பட்டார். இவை அனைத்தும் ஜெயலலிதாவின் நேரடி பார்வையின் கீழ் நடைபெற்றது என்று முத்துலட்சுமி கூறியுள்ளார்.