முன்னாள் ஆசிரியர் கே.பாலச்சந்தருக்கு அஞ்சலி செலுத்திய அரசுப் பள்ளி!
திருவாரூர்: மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் முன்பு ஆசிரியராகப் பணியாற்றிய, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களும் ஆசிரியர்களும், பாலச்சந்தர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கே.பாலசந்தர் 1959-ஆம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றினார். இங்கு பணியாற்றிய போதே இப்பகுதியில் ஏராளமான மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அதில் நல்ல வரவேற்பும் பெற்றார். நல்ல இயக்குநராகப் பெயர் பெற்ற பாலச்சந்தர், ஆசிரியர் பணியில் இருந்தபோது நல்ல ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார்.
ஆசிரியராகப் பணியாற்றிய சமயத்தில்தான் அவர் சென்னையில் வேலை கிடைத்து பணி மாறினார். பின்னர் திரையுலகப் பாதைக்கு மாறி வந்தார். சாதனை படைத்தார், சகாப்தம் ஆனார்.
இந்த நிலையில் புதன்கிழமை கே.பாலச்சந்தர் பணியாற்றிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவரது மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலரும் இறங்கல் தெரிவித்து பேசினார்கள். மேலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்துக்கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் த.மு.எ.ச நிர்வாகி சுப.சிதம்பரம், தெற்குகாடு கிராம நிர்வாகி சதீஸ் குமார், ஆசிரியர்கள் சஞ்சய், ராஜாராம், ஆசிரியைகள் கலைச்செல்வி, அயிஷா பர்வீன், தெய்வானை உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
நல்ல இயக்குநராக, இயக்குநர் சிகரமா்க உயர்ந்த கே.பாலச்சந்தர், ஆசிரியர் கே. பாலசந்தராகவும் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து வருவது அவருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.