சென்னை மெட்ரோ!... நீங்களும் வாங்களேன், ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம்!!
சென்னை: சும்மா ஒரு ஜாலி ரைட்... பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் என்பதாகத்தான் இருக்கிறது சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் நபர்களின் கருத்து.
வெளிநாடுகளில் சாலைகளில் வாகனம் செல்லும் போது பாலத்தின் மீது அழகாய் பயணிக்கும் புல்லட் ரயில்களையும் அதற்கு மேலே உரசிக்கொண்டு செல்வதைப் போல செல்லும் விமானத்தையும் ஒரே நேரத்தில் திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் பார்த்து ரசித்திருப்போம். அதே போன்றதொரு உணர்வை நமது சென்னைவாசிகளும் கடந்த சில நாட்களாக அனுபவித்து வருகின்றனர்.
சென்னைவாசிகள் ஏற்கனவே சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயிலில் பயணித்தவர்கள்தான் என்றாலும் மெட்ரோ ரயிலில் பயணிப்பது புதுவித அனுபவத்தை தரும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. எனவேதான் குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர்.
சென்னைவாசிகளின் முக்கிய சுற்றுலா தலமாகிவிட்டது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள்... இதுதான் முதல்முறை சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் என்பதுதான் நிறைய பயணிகளின் கருத்தாக இருக்கிறது.
சுத்தமான அழகு
சும்மா பளபளவென்று அசத்தலாக இருக்கிறது ரயில்நிலையங்கள். ரயில்களும் குளுகுளு வென்று புது மணப்பெண் போல புத்துணர்ச்சியோடு இருக்கிறது. ரயில் நிலையத்தில் காலடி எடுத்து வைத்த உடனே அதன் தூய்மையான அழகும் பிரம்மாண்டமும் ஏதோ கார்ப்பரேட் கம்பெனிக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது.
நகரும் மின் ஏணி
வெற்றிலைக் கறைகளையும்... ஆங்காங்கே கொட்டி வைத்த குப்பைகளுமாய் ரயில் நிலையங்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு இது புது அனுபவம்தான். நகரும் மின் ஏணி... பளபளக்கும் படிக்கட்டுகள் என பார்த்துக்கொண்டே மேலே ஏறினால் முதலாவது மாடியில் டிக்கெட் கவுண்டர்கள் இருக்கின்றன.
இதுதான் டிக்கெட்டா
தானியங்கி இயந்திரத்திலும் டிக்கெட் எடுக்கலாம். அதில் எடுக்கத் தெரியாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் கவுண்டரிலும் எடுக்கலாம். நாம் சொல்லும் இடத்தை கூறினால் வட்டமாய் டோக்கன் போல ஒன்றை தருகிறார்கள்.
அசத்தல் பாதுகாப்பு
டிக்கெட் எடுத்த உடனேயே நம்முடைய பொருட்கள், அனைத்தும் ஸ்கேன் செய்யப்படுகிறது. நம்மையும் நன்றாக பரிசோதனை செய்த பிறகே ரயில் ஏறவே அனுமதிக்கின்றனர்.
டிக்கெட் முக்கியம்
நாம் நேரடியாக போய் ரயில் ஏறிவிட முடியாது.. டிக்கெட்டை காண்பித்தால் மட்டுமே ரயில் இருக்கும் இடத்திற்கு போக வழியே திறக்கிறது. அதை தாண்டி வந்தால் மறுபடியும் படிக்கட்டோ... நகரும் மின் ஏணியோ ஏறவேண்டும் ரயில் வரும் பிளாட்பாரத்திற்கு செல்ல... ஸ்ஸ்ஸ் அப்பா முடியல... எத்தனை படிக்கட்டு!
மஞ்சள் கோடு தாண்டாதீர்கள்
பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் பறந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை நிமிடத்தில் ரயில் வரும் என்ற அறிவிப்பு ஒருபுறம் இருக்க, திரையிலும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.ரயில் பிளாட்பாரத்தில் அதீத கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பிளாட்பாரத்தில் உள்ள கோட்டினை தாண்டியே நிற்கச் சொல்கின்றனர்.
வருது வருது… விலகு விலகு
நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நீல வண்ண முகப்பும் சில்வர் க்ரேவும் உடலும் கொண்ட ரயில் வந்து நிற்கிறது. ரயில் வந்து நின்று கதவு திறந்த பிறகே ஏற முடிகிறது. ரயிலில் ஏறும் போதே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
டேக் எ செஃல்பிதான்
ரயிலில் ஏறிய அடுத்த நொடியே அனைவரின் கைகளும் செல்போனைத்தான் தேடுகின்றன. எல்லாம் செல்ஃபிதான். நின்று ஒரு செல்ஃபி... சீட்டில் அமர்ந்து ஒரு செல்ஃபி என சும்மா ஒரே செல்ஃபி புள்ளைங்களாகத்தான் இருக்கிறார்கள்.
நாம சென்னைலதான் இருக்கோமா?
ரயில் பயணத்தில் இதுவரை அனுபவித்திராத பயணம் என்கின்றனர் பயணிகள். மெட்ரோ ரயிலை பார்த்து பயணிப்பதற்காகவே திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இருந்தெல்லாம் வந்திருப்பதாக கூறினர் சில பயணிகள்.
லண்டன் ஃபீலிங் வருது
மெட்ரோ ரயில் ரொம்ப நல்லா இருக்கு... வெளிநாடெல்லாம் போயிட்டு வந்திருக்கோம் அங்கே மாதிரியே சென்னையிலும் மெட்ரோ ரயில் ஓடுறது ரொம்ப சந்தோசமா இருக்கு. மெட்ரோ ரயில் பார்க்கிறதுக்காவே வந்தோம். நம்ம சென்னையான்னு நம்பவே முடியலை... லண்டன்ல இருக்கிற மாதிரி இருக்கு என்கின்றனர் சுமதி குடும்பத்தினர்.
ஜாலியா இருக்கு
ஆலாந்தூர்ல ஏறின வேகம் தெரியலை... இதோ கோயம்பேட்ல இறங்க போறோம்.. பஸ்லன்னா நின்னு நின்னு முக்கால்மணிநேரமாயிரும். இது நேரத்தை மிச்சப்படுத்துது. வெயிலோ, புகையோ நம்மள பாதிக்காது என்கிறார் ஒரு கல்லூரி மாணவி.
ஸ்டூடன்ஸ் நிறைய வருவாங்க
ஸ்கூல், காலேஜ் போறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நிறைய பேர் மெட்ரோ ரயில்ல பயணிப்பாங்க. அதனால மாணவர்களுக்கு தனியா ஏதாவது கட்டண சலுகை கொடுத்தா நல்லா இருக்கும் என்கின்றனர் மாணவர்கள்.
சாமான்யர்களும் அனுபவிக்கணுமே
மெட்ரோ ரயில் பயணத்தினால் நேரம் மிச்சமாகிறது... மாசற்ற பயணம். ஒரு தூசு இல்லை. குப்பையில்லை... ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த பயணம் கிடைக்க வேண்டும். தினசரி பயணிப்பவர்களுக்கு இது கட்டுபடியாகாது. நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு தொழிலாளி கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு சென்று வர 80ரூபாய் செலவழிக்க வேண்டும். எனவே கட்டணத்தை குறைப்பதன் மூலம் ஏராளமானோர் பயனடைவார்கள் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சுதாவின் கருத்து.
சும்மா ஜிவ்வுன்னு இருக்கு
சின்னதாய் ஒரு ஜெர்க் கூட இல்லை. அலுங்காமல் குலுங்காமல் பயணிக்கலாம். மாசற்ற பயணம்... புகை, தூசி எதுவும் படாமல், போட்ட பவுடர் கலையாமல் போய் இறங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
சுத்தத்தை கடை பிடிக்கணும்
மெட்ரோ ரயில் நிலையங்களும், ரயிலும் சுத்தமாகவே இருக்கிறது. இந்த சுத்தமான அழகை பார்ப்பதற்காக வந்து செல்லும் மக்கள் சுத்தத்தை பேணவேண்டும். எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை கடைபிடிக்க வேண்டும்.
தண்டிக்கலாம் தப்பில்லை
மெட்ரோ ரயிலின் அழகைப் பார்க்கவே பல்லாயிரக்கணக்காணோர் பயணிக்கின்றனர். இதில் பயணிக்கும் அனைவருமே ரயிலையும் ரயில் நிலையத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கவேண்டும். ஆனால் நம்ம மக்களோ பான்பாராக் போட்டு எச்சில் துப்புவது ஒருபுறம் இருக்க ரயில் சீட்டுக்களில் ஆர்டின் போட்டு அம்பு விடுவார்கள் அது மட்டுமல்லாது மனதிற்கு பிடித்தவர்களின் பெயர்களையும் எழுதுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டனை கொடுக்கலாம் என்பதும் பயணிகளின் கருத்தாகும்.