இந்தா வந்துட்டாங்கள்ல.. அதிமுகவை வழி நடத்தும் தகுதி எங்களுக்குதான் உள்ளது.. சொல்கிறார் பாஸ்கரன்!
அதிமுகவை வழி நடத்தும் தகுதி தங்களின் குடும்பத்துக்குதான் உள்ளது என தினகரனின் சகோதரர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: அதிமுகவை வழி நடத்தும் தகுதி தங்களின் குடும்பத்துக்குதான் உள்ளது என தினகரனின் சகோதரர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
இந்த வெற்றியை வைத்தே கட்சியையும் ஆட்சியயையும் விரைவில் கைப்பற்றுவோம் என அவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரனின் சகோதரரான பாஸ்கரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
எங்களுக்குதான் தகுதி
அப்போது அதிமுகவை வழி நடத்தும் தகுதி தங்களின் குடும்பத்தினருக்கு தான் உள்ளது என்று அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸிடம் சின்னம் மட்டும் தான் உள்ளது என்றார்.
தொண்டர்களின் ஆதரவு எங்களுக்குதான்
அந்த சின்னம் எப்படி அவர்களுக்கு கிடைத்தது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். ஆனால் தொண்டர்களின் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என்பது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நிரூபணமாகியுள்ளது என்றும் பாஸ்கரன் கூறினார்.
உரிமை எங்களுக்குதான் உள்ளது
எம்ஜிஆர் தொடங்கிய இந்த கட்சியை வழி நடத்தும் தகுதி எங்களுக்குதான் உள்ளது என மக்கள் உத்தரவாதம் கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறினார். கட்சியை வழி நடத்தும் உரிமையும் எங்கள் குடும்பத்தினருக்குதான் உள்ளது என்றும் பாஸ்கரன் கூறினார்.
கட்சி எங்களுடையது..
சின்னம் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் கட்சி எப்போதும் எங்களுடையதுதான் என்றும் பாஸ்கரன் கூறினார். ஒரு தொகுதியை வைத்து எப்படி தமிழகம் முழுவதும் வெற்றிபெற முடியும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஒரு சோறு பதம்
அதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று பாஸ்கரன் பதிலளித்தார். மேலும் எதிர்காலத்தில் இதற்கு விடை கிடைக்கும் என்றும் பாஸ்கரன் கூறினார்.