என் இமேஜ் உடைஞ்சிருச்சு, ஆனா மீண்டு வந்துவிடுவேன்... நாஞ்சில் சம்பத் நம்பிக்கை!!
தனது இமேஜ் உடைந்துவிட்டதாகவும் ஆனால் அதனை மீண்டும் கொண்டுவந்து விடுவேன் என்றும் அதிமுக (அம்மா) செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: தனது இமேஜ் உடைந்துவிட்டதாகவும் ஆனால் அதனை மீண்டும் கொண்டுவந்து விடுவேன் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் செய்தி தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முதலில் சசிகலா தரப்பை எதிர்த்தது குறித்தும் பின்னர் அவருக்கு ஆதரவாக பேசுவதும் குறித்தும் நெறியாளர் நாஞ்சில் சம்பத்திடம் காரசாரமான கேள்விகளை கேட்டார்.
நறுக் நறுக் என கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாஞ்சில் சம்பத் கொஞ்மும் தயக்கம் இன்றி பதிலளித்தார். அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில கேள்விகளும் அதற்கான நாஞ்சில் சம்பத்தின் பதில்களும்...
என் இமேஜ் உடைந்து விட்டது
கேள்வி: மாற்றி மாற்றி பேசி வருவதால் நாஞ்சில் சம்பத்தின் இமேஜ் உடைந்துவிட்டதாக கூறப்படுகிறதே? ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில்: ஆம் உண்மைதான். எனது இமேஜ் உடைந்துவிட்டது. ஆனால் அதனை நான் மீண்டும் கொண்டுவந்துவிடுவேன்.
சசியை சந்திப்பேன்
கேள்வி: சிறையில் சசிகலாவை சம்பத் ஏன் சந்திக்கவில்லை? சந்திப்பீர்களா?
பதில்: நிச்சயம் சந்திப்பேன். தேர்தல் முடிந்தப் பிறகு சிறைக்கு சென்று பொதுச்செயலாளர் சசிக்கலாவை நிச்சயமாக சந்திப்பேன்.
உச்சநீதிமன்றம் சொன்னா ஏத்துக்கனுமா?
கேள்வி: ஒரு குற்றவாளியை சிறைக்கு சென்று சந்திப்பதற்கு சம்பத்துக்கு தயக்கம் இல்லையா?
பதில்: எந்த தயக்கமும் இல்லை, யார் சொன்னது சசிகலா குற்றவாளி என்று? உச்சநீதிமன்றம் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உச்சநீதிமன்றம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் சொல்லட்டும் சசிகலா குற்றவாளி என்று.
மத்திய அரசின் சதி உள்ளது
கேள்வி: இரட்டை இலை முடக்கத்தின் பின்னணியில் சதி இருக்கிறதா?
பதில்: நிச்சயமாக சதி இருக்கிறது. இரட்டை இலை முடக்கத்தின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. காரணம் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் மற்ற பாஜகவின் அல்லக்கைகள் எல்லாம் முன்னரே இரட்டை இலை முடக்கப்படும் என கூறினர்.