மகனை அடித்து கொன்று விட்டார்கள் - சரத்பிரபு தந்தை அமைச்சரிடம் புகார்
என் மகனின் உடலில் காயங்கள் இருக்கின்றன. அடியாட்களை வைத்து அடித்து கொலை செய்து விட்டார்கள் என்று டெல்லியில் மரணமடைந்த சரத்பிரபுவின் தந்தை செல்வமணி கண்ணீருடன் புகார் கூறியுள்ளார்.
Recommended Video
திருப்பூர்: டெல்லியில் மரணமடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு தோள்பட்டையிலும், தலையிலும் காயம் இருப்பது போன்ற புகைப்படத்தை அவரது பெற்றோர் வெளியிட்டுள்ளனர். அடியாட்கள் மூலம் தங்கள் மகனை கொலை செய்து விட்டார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் பாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு என்பவர் டெல்லியிலுள்ள யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் கடந்த 17ம் தேதி காலை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இன்சுலினை ஊசி மூலம் தனக்கு தானே செலுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியானது. அவரின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். பொட்டாசியம் குளேரேட்டை அளவிற்கு அதிகமாக உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சரத்பிரபுவின் உடல் பிரேதபரிசோதனைக்குப் பின்னர் நேற்று திருப்பூருக்கு ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அவரின் கழுத்து பகுதி இறுக்கப்பட்டது போல காயங்கள் இருந்தது. மேலும், அவரின் தலைப்பகுதியிலும் காயங்கள் இருந்தன.
இதனை செல்போனில் அவரது பெற்றோரும் உறவினர்களும் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். சரத்பிரபு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி சரத்பிரபுவின் தந்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார்.
தன்னிடம் நன்றாக பேசிய மகன் காலையில் மரணமடைந்தது எப்படி என்று தெரியவில்லை. அடியாட்களை வைத்து அடித்து கொலை செய்து விட்டனர் என்றும் சரத்பிரபு தந்தை செல்வமணி புகார் கூறினார். இதையடுத்து, சரத்பிரபு கொலை செய்யப்பட்டிருந்தால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.