அறிவு திரும்ப வருவார்.. நம்பிக்கையோடு காத்திருக்கும் அற்புதம் அம்மாள்
Recommended Video
சென்னை: பேரறிவாளன் என்ற ஒற்றை சொல் இன்று தமிழக அரசியலை அறிந்தவர்கள் அனைவரும் அறிந்த பெயர். இன்று தமிழகமே அவரது விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்குப் பின்னால் நித்தம் நித்தம் பேரறிவாளனை நினைத்து வருந்தும் அவரின் தாயார் அற்புதம்மாளின் ஓயாத உழைப்பும், வற்றாத கண்ணீரும் இருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் அவர்களின் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. இப்படியாக நீண்டு கொண்டிருந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக இவர்களது விடுதலை குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூற அப்போதைய முதலைமைச்சர் ஜெயலலிதா இவர்களை விடுவிக்க முடிவு செய்ததோடு அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்தார். ஆனால் மத்திய அரசு இவர்களின் விடுதலைக்கு நீதிமன்றத்தில் தடை கோர மீண்டும் நீதிமன்றத்தின் கைகளுக்கே சென்றது இந்த விவகாரம். 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் மீண்டும் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி தன்னிடம் இருந்த பந்தை ஆளுநரின் பக்கம் தள்ளிவிட்டுள்ளது.
நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், நவீன் சின்கா, ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு மீண்டும் வாதப்பிரதிவாதங்களை தொடங்கி வைத்துள்ளது. கடந்த முறை உச்ச நீதிமன்றம் தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியபோதே ஜெயலலிதா அரசு மத்திய அரசிடம் கேட்காமல் தன்னிச்சையாக இவர்களை விடுதலை செய்திருந்தால் எவ்வித பிரச்சனையும் எழுந்திருக்காது என்பது சட்டம் தெரிந்த பலரும் கூறும் வாதம். இப்போது இந்தப் பிரச்சனையில் ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே இவர்களின் எதிர்காலம் இருக்கப் போகிறது.
மாநில அரசு இவர்களை விடுவிப்பதில் முனைப்பாகவே உள்ளது. ஏனெனில் ஏற்கனவே அதிமுக அரசு இவர்களை விடுவிப்பது என்று ஜெயலலிதா இருக்கும்போதே முடிவு எடுத்து விட்டதால் அம்மா வழியில் நடக்கிறோம் என்று கூறும் பழனிசாமி அரசு இதிலிருந்து மாறமாட்டார்கள் என்று நம்பலாம். அதே வேளையில் பெரும்பாலான கொள்கை அளவில் எவ்வித மாற்றங்களையும் கொண்டிராத காங்கிரசும் பாஜகவும் இதில் என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்பதும் இந்த வழக்கைப் பொறுத்த மட்டில் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆளுநர் என்னதான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்தாலும் அவரும் பாஜகவை சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பாஜகவுக்கு 7 பேர் விடுதலையில் முழு மனதளவில் விருப்பம் இல்லை என்பது அவர்களது கடந்த கால நடவடிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆக பாஜகவை சேர்ந்த ஆளுநர் தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொள்வாரா, அல்லது மறுப்பாரா எனபது மில்லியன் டாலர் கேள்வி. இவர்களின் விடுதலை வாக்கு வங்கி அரசியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்பதால் அரசியல் கட்சிகள் இதில் ஆதாயம் பெற முயற்சிக்கும் என்பதிலும் ஐயமில்லை.
இப்போதைய நிலையில் மாநில அரசின் முடிவை ஆளுநர் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்போரும் இருக்கிறார்கள் அதே வேளையில் மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொள்வதோ அல்லது திருத்தம் செய்வதோ அவரது அதிகார எல்லைக்குள் வரக்கூடிய ஒன்று. இதற்கு எவ்வித கால வரம்பும் இல்லை என்பது இன்னொரு தரப்பு வாதம். இது அனைத்தையும் தாண்டி இந்திய அரசியலமைப்பு சட்டம் 161 வது பிரிவின்படி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்பதுதான் எதார்த்தம்.
நிலைமை இப்படி நீடிக்க இந்த தீர்ப்பு குறித்து இந்த கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் என்ன நினைக்கிறார் என்று ஒன் இந்தியாவுக்காக அவரை சந்தித்தேன். 27 வருடங்கள் ஓயாத ஓட்டம் ஓடியும் களைப்பில்லாத போராளியாக நம்மை எதிர்கொண்டார் அவர். கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளனின் விடுதலையை தவிர வேறு எதையுமே நினைத்து பார்காத அவர் இப்போதும் குறையாத நம்பிக்கையோடே பேசுகிறார். இந்த தீர்ப்பு ஒருசேர மகிழ்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்திருப்பதாக நம்மிடம் கூறிய அவர் எனது மகன் சிறையிலிருந்து வெளியேறி எனது வீட்டிற்கு வந்தால் மட்டுமே நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவேன் என்றார். பேரறிவாளன் உட்பட இவர்களது விடுதலையை ராகுலே அங்கீகரித்து விட்டதாக கூறும் அவர் அவரைத் தாண்டியும் சிலர் எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலித்து வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
விசாரித்து விட்டு அனுப்பிவிடுகிறோம் என்று கூறியே தனது மகனை அழைத்து சென்றவர்கள் இன்னமும் விடுவிக்காத மனக்காயங்களோடு பேசும் அற்புதம்மாள் 27 வருடங்களுக்கு மேல் இன்னமும் அவர்களை சிறையில் வைத்திருப்பவர்களின் எண்ணம்தான் என்ன என்று வலிநிறைந்த கேள்வியை முன் வைக்கிறார். இயற்கை விவசாயத்தை நேசிக்கும் பேரறிவாளன் விடுதலை பெற்று வந்து நிச்சயம் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அற்புதம்மாள் திருமணம் தொடர்பாக தன்னிடம் பேசிய அறிவு தான் விடுதலை பெற்று வரும் வரை தனக்கு பெண் தேடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் வெளியே வந்த பின்னர் தனக்கென்று ஒரு வாழ்க்கை நிச்சயமாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக நம்மிடம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பேசியவர் தீர்ப்பின் நகல் தனக்கு கிடைக்கவில்லை என்றும் நகல் கிடைத்ததும் வழக்கறிஞர்களை கலந்தாலோத்துவிட்டு அடுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நம்பிக்கையோடு தெரிவித்தார். வாழ்த்துகளை கூறி விடை பெற்றோம் நாம்.