தேசதுரோக வழக்கில் எந்த தீர்ப்பு கொடுத்தாலும் ஏற்கும் மனநிலையில் நீதிமன்றத்துக்கு வந்தேன்: வைகோ
சென்னை: தேசத் துரோக வழக்கில் எந்த தீர்ப்பு கொடுத்தாலும் ஏற்கும் மனநிலையில்தான் நீதிமன்றத்துக்கு தாம் வந்ததாக மதிமுக பொதுச்செயலர் வைகோ உருக்கமாக தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் இருந்து வைகோவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
நான் அந்த கூட்டத்தில் பங்கேற்று 1 1/2 மணி நேரம் பேசினேன். ஈழத்தில் லட்சோப லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட ஆயுதபலமும், முப்படைகளின் பலத்தையும் கொடுத்து துரோகம் செய்தது இந்திய அரசு தான். லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு முழுக்க முழுக்க துரோகம் இழைத்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான்.
கருணாநிதி முதல்வர்...
இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கு பதிவு செய்யப்படும் போது திமுக தலைவர் கருணாநிதி தான் முதல்வராக இருந்தார்.
112 முறை விசாரணை
இதுவரை 112 முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 6 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்துள்ளனர். பெரும்பாலும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன்.
வழக்கில் விடுதலை
இந்த வழக்கில் இருந்து என்னை நீதிபதி விடுதலை செய்துள்ளார். இதன் மூலம் தேச விரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்துள்ளனர்.
காங்கிரஸ்தான் காரணம்...
ஈழத்தமிழர் படுகொலை நடந்தது உண்மை தான். இதற்கு முழுமுதல் காரணம் மத்திய அரசு தான். இது மன்னிக்க முடியாத குற்றம்.
திமுக உடந்தை
அப்போது மத்திய அமைச்சரவையில் திமுகவும் அங்கம் வகித்தது. அதை தடுக்க தவறிய அப்போதைய தமிழக அரசும் குற்றவாளி தான் என்று தமிழகம் முழுவதும் பேசினேன். இதில் இருந்து ஒரு உண்மை தெரிகிறது. அது என்னவென்றால், ஈழத்தமிழர் படுகொலைக்கு மத்திய அரசு தான் காரணம் என்று தெரிவித்த கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்பது தெளிவாகிறது.
எந்த தீர்ப்பு வந்தாலும்...
என் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அனைத்தையும் ஆமாம் நான் தான் பேசினேன் என்றேன். இந்த வழக்கில் எந்த தீர்ப்பு கொடுத்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் தான் வந்தேன்.
மத்திய அரசுதான் குற்றவாளி
நான் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று நீதிமன்றம் உத்தரவு மூலம் தெரிகிறது. மத்திய அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டுமென்ற கருத்து இனி தமிழகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்படும்.
புலிகள் விடுதலை செய்யப்படவில்லை
சுதந்திர தமிழீழம் மலரும். ஆயுப்போர் முடிவுக்கு வந்தாலும் மக்கள் இன்னும் ஈழத்தில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளோ சிறையில் இருப்பவர்களோ யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
மோடி அரசும் துரோகம்
ஈழத்தமிழர்கள் பகுதிகள் ராணுவ முகாம்களாக மாற்றப்பட்டு, சிங்களர் குடியேற்றப்பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. இதை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனும் கூறி வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த அதே துரோகத்தைத்தான் தற்போது மோடி அரசும் செய்து வருகிறது. அதன் உச்சகட்டமாகத்தான் மோடி பதவியேற்பு விழாவில், கொலைகாரப் பாதகனான ராஜபக்சேவையை அரியணை ஏற்றி அழகுபார்த்தது.
புதிய விழிப்புணர்வு
அப்போது நானும் கழக தொண்டர்களும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தோம். தமிழர்களுக்கு எதிராக எங்கு குற்றம் இழைக்கப்பட்டாலும் அங்கு குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக மதிமுக இருக்கும். இந்த தீர்ப்பு மூலமாக ஈழத்திற்காக குரல் கொடுக்கும் தமிழக இளைஞர்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
இவ்வாறு வைகோ கூறினார்.'