ஸ்டெர்லைட் விவகாரத்தில் சுயநலத்துக்காக என்றுமே போராடியதில்லை - வைகோ உருக்கம்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் சுயநலத்துக்காக என்றுமே போராடியதில்லை என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
கோவில்பட்டி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தான் சுயநலத்திற்காக என்றுமே போராடியது இல்லை என்றும், மக்களுக்காகவும், மீனவர்களுக்காகவும் தான் போராடியதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு பிரசாரப் பயணத்தை துவங்கியுள்ளார். கோவில்பட்டியில் இந்த பயணத்தை துவங்கிய வைகோ மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தை அழிக்க நாசகார திட்டங்களான நியூட்ரினோ, நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என அனைத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட தமிழகம்
இதோடு காவிரி பிரச்னை, மீனவர் பிரச்னை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் என தமிழக மக்கள் அனைத்து விதங்களிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ளவே இல்லை. அமெரிக்காவில் அசார்பூ என்கிற நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் போராடி 50 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆலையை மூடவைத்தனர். ஆனால் இன்றும் அதன் பாதிப்புகள் அங்குள்ள நிலங்களில் இருக்கிறது.
சுயநலம் இல்லை
இதை எல்லாம் முன்வைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக கடந்த 22 வருடங்களாகத் தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக இந்த இயக்கமும், நானும் சந்தித்த பழிகள் ஏராளம். இதை தடுக்க நேரடியாக நீதிமன்றம் சென்று நானே வாதடினேன். இதில் என்னுடைய சுயநலம் எதுவும் இல்லை. மக்களுக்காகவும், மீனவர்களுக்காக மட்டுமே போராடினேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடல்
மேலும், தொடர்ந்து மதிமுக விதைத்த விதைதான் இன்று மரமாக வளர்ந்துள்ளது. போராட்டக்களத்தில் மக்கள், வணிகர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் போராட்டம் எந்த ஒரு காலத்திலும் தோற்காது. அதற்கு இந்த ஸ்டெர்லைட் விவகாரம் சாட்சியாக இருக்கும்.
அனுமதி கொடுத்த அதிமுக
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது அதிமுக அரசு. ஆனால், இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது என்று சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை. இனியும் மக்களை சமாளிக்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் போராட்டம் தொடரும் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.