என்னை பிள்ளை போல நடத்திய கோமதியம்மாள் டீச்சர்.. நெகிழும் சக்திவேல்
சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி தனது ஆசிரியை கோமதியம்மாள் குறித்து நெகிழ்ச்சியுடன் தனது எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நமது வாசகர் ஆர். சக்திவேல்.
ஒவ்வொருவருக்கும் அவர்களது ஆசிரியர்கள் குறித்த நினைவுகள் என்றுமே மறக்க முடியாதது.. மலரும் நினைவுகளாக காலம் தோறும் கூடவே இருக்கும். அறிவு புகட்டிய பகலவர்கள் அவர்கள். அந்த வகையில் நமது வாசகர் ஆர். சக்திவேல் தனது ஆசிரியை கோமதியம்மாள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டது:
வணக்கம்... என் பெயர் சக்திவேல்.. நான் தற்போது ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.. நான் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தேன்.
என் பெற்றோர் படிப்பறிவு இல்லாமல் இருந்தாலும் என்னை என் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சேர்த்தனர்...பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் ஒரு வருடம் ஒன்றாம் வகுப்பில் பெயிலாகி விட்டேன். அதனால் பள்ளி செல்லவே விருப்பம் இல்லாமல் இருந்த எனக்கு கடவுளாக வந்தார் கோமதியம்மாள் எனும் ஆசிரியை...
என்னை தம் பிள்ளை போல் பாசம் காட்டி பள்ளி மீது விருப்பம் உண்டாக்கி தினமும் பள்ளிக்கு வர வைத்து பாடம் நடத்தினார்... அதன் பின் நான் விடுமுறை எடுத்ததே இல்லை... அவர் அளித்த உற்சாகத்தால் 10ம் வகுப்பில் 438 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றேன் (2000). அதன் பின் 12ம் வகுப்பில் 1024 மதிப்பெண் (2002ல்). B.Sc, M.Sc, B.Ed., முடித்து ஆசிரியராக 2008 முதல் பணியாற்றி வருகிறேன்.
படிக்காத பெற்றோருக்கு மகனாக பிறந்து, என் ஆசிரியர் அளித்த ஊக்கத்தால் இன்று ஒரு ஆசிரியராக இந்த சமூகத்தின் முன்னால் நிற்கிறேன்... அந்த ஆசிரியர் அவர்கள் மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இப்போது நானும் கூலி வேலைக்குத் தான் சென்று கொண்டிருப்பேன்.