இரவெல்லாம் திபு திபு வெள்ளம்.. பகலில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை... அதுதான் மயிலாப்பூர்!
மயிலாப்பூரில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்த நிலையில் இன்று பகலில் இயல்பு நிலை திரும்பியது.
Recommended Video
சென்னை: மயிலாப்பூரில் நேற்றிரவு பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் இன்று காலையில் இயல்பு நிலை திரும்பியது.
மயிலாப்பூரில் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் தாழ்வாக இருந்தாலும் வெள்ளநீர் ஒரு நாளைக்கு மேல் தேங்குவதில்லை.
வியாழக்கிழமையன்று பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சாலையெங்கும் குளமானது. இதனால் சாந்தோம் சாலையிலும், கச்சேரி சாலையிலும் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்தன.
வடிந்த வெள்ளநீர்
காலையில் வெள்ளம் வடிந்த காரணத்தால் இயல்பு நிலை திரும்பியது. கடற்கரை சாலையில் வழக்கம் போல வாகனங்கள் செல்கின்றன. ஒரே நாளில் வெள்ளம் வடிந்து செல்லும் அளவிற்கு சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளநீர் மாயம்
புறநகர் பகுதி போல மயிலாப்பூரும் தீவாகிவிடுமோ என்று அஞ்சிய நிலையில் வெள்ள நீர் அத்தனையும் பக்கிங்காம் கால்வாய் வழியா வழிந்தோடி கடலில் கலந்து விட்டது.
பக்கிங்காம் கால்வாய்
சென்னையில் பெய்யும் பலத்த மழையையும், பெருகும் வெள்ளத்தையும் தாங்கும் சக்தி பக்கிங்காம் கால்வாய்க்கு மட்டுமே உள்ளது. பல பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்தாலும் 2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் கற்றுக்கொண்ட பாடத்தினால் பல இடங்களில் தூர்வாரப்பட்டு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை தாங்கியது.
ஒரே நாளில் இயல்பு நிலை
புறநகர் பகுதிகளில் 10 செமீ மழைக்கே வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து வெளியேற வழியில்லாமல் மிதக்கிறது. சரியான கட்டமைப்பு வசதி இல்லாததே இதற்குக் காரணம். மயிலாப்பூர் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாகவே சிறப்பு வடிகால் வசதியுடன் கூட கட்டமைப்பு கொண்ட பகுதியாகும். எனவேதான் 30 செமீ மழை பெய்தும் ஒரே நாளில் வெள்ளம் வழிந்தோடியது.
ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
சென்னையின் புறநகர் பகுதிகளிலும் ஆறுகளின் வழித்தடங்கள், கால்வாய்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். இதன் காரணமாகவே வெள்ளநீர் வழிந்தோட வழியின்றி தவிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே புறநகர்வாசிகள் தப்பிக்க முடியும். ஆள்பவர்களை மட்டுமே குற்றம் சொல்லி பயனில்லை. மக்களும் மாறவேண்டும். இரண்டு முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து இனியாவது பாடம் கற்க வேண்டும்.