மயிலையே கயிலை... பங்குனிப் பெருவிழா இன்று கொடியேற்றம் - ஏப்.9ல் அறுபத்துமூவர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாத பெரு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
சென்னை: மயிலாப்பூரில் உள்ள சிவஸ்தலங்களில் சூரியனின் அம்சமாக கூறப்படும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா சூரியனின் நாளான இன்று ஞாயிற்றுகிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தேர்திருவிழா ஏப்ரல் 8ஆம் தேதியும் கபாலீஸ்வரர், 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா ஏப்ரல் 9ஆம் தேதியும் நடக்கிறது.
சைவ கோவில்களில் பிரசித்தி பெற்று விளங்கும் கபாலீஸ்வரர் கோவில், சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி பெருவிழா ஏப்ரல் 2ஆம் தேதி முதல், 13ஆம் தேதி வரை நடக்கிறது.
கபாலீஸ்வரர் திருவீதி உலா
விழாவை முன்னிட்டு சூரிய வட்டம், புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனம், சவுடல் விமானம், வெள்ளி மூஷிக வாகனம், புன்னை மரம், வேங்கை மர வாகனங்கள், சந்திர வட்டம், கிளி அன்ன வாகனங்கள், பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்கள், நாகம், காமதேனு, ஆடு, யானை உள்ளிட்ட ஐந்திருமேனிகள் வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் பகல் மற்றும் இரவு நேரங்களில் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
கோலவிழியம்மன்
முதல் நாள் கிராம தேவதை பூஜை நடைபெற்றது. அம்பிகையின் சிறப்பு வடிவமான கோலவிழி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்று இரவு வெள்ளியாலான மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார்.
கொடியேற்றம்
இன்று ஏப்ரல் 2ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் பங்குனி விழா தொடங்கியது. அதிகாலையில் ஏராளமானோர் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வானஅதிகாரநந்தி சேவை ஏப்ரல் 4ஆம் தேதியும், வெள்ளி ரிஷப வாகன காட்சி ஏப்ரல் 6ஆம் நடக்கிறது.
63 நாயன்மார்களுக்கு காட்சி
தேர்திருவிழா ஏப்ரல் 8ஆம் தேதியும் கபாலீஸ்வரர், 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா ஏப்ரல் 9ஆம் தேதியும் நடக்கிறது. அன்றிரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது.
திருக்கல்யாணம்
10ம் தேதி மாலை இறைவன் பிச்சாடனார் மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும், 11ம் தேதி மாலை 6 மணியளவில் புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும் 12ம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி விழாவும், 13ம் தேதி விழா நிறைவடைகிறது.