மைனா நந்தினி கணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறுமா- ஜூன் 2ல் தெரியும்
நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வம்சம் படத்தில் அறிமுகமானவர் நந்தினி. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த அவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர்மூலம் பிரபலமானார். அந்தத் தொடரில், 'மைனா' என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் பெயருக்குமுன்பு 'மைனா' புகழ் ஒட்டிக்கொள்ள, 'மைனா' நந்தினியானார்.
தொடர்ந்து, விஜய் டி.வி.யில் 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். தற்போது ஜீ தமிழில் குழந்தைகள் நிகழ்ச்சி, டார்லிங் டார்லிங் தொடரிலும் நடித்து வருகிறார்.
நந்தினி திருமணம்
சென்னையில் உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் கார்த்திகேயன் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சென்னை வளசரவாக்கத்தில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
விவாகரத்து முடிவு
இதன் காரணமாக இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். நந்தினி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கார்த்திகேயன் லாட்ஜ் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வழக்குப் பதிவு
இந்த தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். தற்கொலைக்கு முன்பாக கார்த்திக் எழுதிய கடிதத்தில் நந்தினியின் அப்பாதான் தற்கொலைக்குக் காரணம் என்று எழுதியிருந்தார். நந்தினியும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
சிபிசிஐடிக்கு மாற்ற மனு
நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி அவரது தாயார் சாந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தனது மகன் தற்கொலை செய்து கொண்ட ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் நந்தினியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த நெருக்கடியால், தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆனால் விருகம்பாக்கம் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் எனவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் 2ல் தெரியும்
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு விருகம்பாக்கம் காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் வழக்கு மீதான விசாரணையை நீதிபதி ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.