ரமேஷ்... சாதிக் பாட்சா... நாமக்கல் சுப்ரமணியன் - தொடரும் மே மாத மர்ம மரணங்கள்
அண்ணாநகர் ரமேஷ் தொடங்கி சாதிக் பாட்ஷா, நாமக்கல் சுப்ரமணியன் என மே மாதத்தில் நடைபெறும் மர்ம மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
சென்னை: சர்ச்சைக்குரிய அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2001ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டாலின் நண்பர் அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார், 2011ஆம் ஆண்டு மே மாதம் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணங்களில் மர்மம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் சுப்ரமணியன் அதே போல ஒரு மே மாதத்தில் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா நகர் ரமேஷ்
கடந்த 1996 - 2001ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னை மாநகராட்சியில் கொடி கட்டிப் பறந்தவர் ரமேஷ். ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் ரமேஷ். மாநகராட்சி டெண்டர்கள், காண்ட்ராக்ட்களைப் பெற இவரைப் பார்த்தால் போதும் என்றஅளவுக்கு அதிகாரம் கொண்டவராக இருந்தார்.
சென்னை மாநகராட்சியில் மேயரின் காருக்கு அருகே தான் இவரது கார் நிற்கும். மாநகராட்சி ஆணையரின் காரை நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தான் இவரது கார் நிற்கும். அந்த அளவுக்கு அங்கு அதிகாரத்துடன் திகழ்ந்தார்.
ஸ்டாலின் நண்பர்
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவரைத் தான் அரசு முதலில் குறி வைத்தது. இவரிடம் விசாரித்தால்தான் ஸ்டாலின் சொத்துக்கள் குறித்த முழு விவரமும் கிடைக்கும் என போலீஸ் கருதியது. எப்படியாவது இவரிடம் இருந்து ஸ்டாலினுக்கு எதிராக வாக்குமூலம் வாங்கிவிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால்,அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீசார் தேடி வந்தனர்.
ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை
2001ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி திடீரென அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்காண காரணங்கள் இதுவரை தெரியவில்லை. அவர்கள்அனைவரும் விஷம் அருந்தியிருக்கலாம். இந்தத் தற்கொலை சம்பவம் ஒரே மர்மமாக உள்ளது என்றனர்.
கொலையா? தற்கொலையா?
ரமேஷ் குடும்பத்தினரின் சாவுக்கு போலீசார் சித்திரவதையே காரணம் என்று திமுகவினர் கடுமையாகச் சாடினர். ஆனால், அது தற்கொலை அல்ல, கொலை என்று ஜெயலலிதா சட்டப் பேரவையிலேயே கூறினார். ரமேஷின் மரணத்தின் பின்னணியில் திமுகவினர் நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று கூறினர்.
சாதிக் பாட்ஷா
நாட்டையே உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் விசாரிக்கப்பட்டவர் சாதிக் பாட்ஷா. 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்ட வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர் ஆவார். சாதிக் பாட்சா கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவந்தார். ஆ. ராசாவின் சகோதரர் கலியபெருமாள் என்பவர் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார்.
தூக்குப் போட்ட சாதிக் பாட்ஷா
2ஜி மூலம் கிடைத்த பணத்தை ஆ. ராசா கிரீன் ஹவுஸ் நிறுவனத்தில் போட்டு வைத்திருந்தார் என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், 2011ம் ஆண்டு மே 16ஆம் தேதி சாதிக் பாட்சா தனது இல்லத்தில் தூக்கிட்டவாறு மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். சாதிக் பாட்ஷாவின் மரணம் பல மர்மங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது.
விஜயபாஸ்கர் நண்பர் மர்ம மரணம்
பல மர்ம மரணங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்ரமணியன் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது நாமக்கல் சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.
நெருங்கிய தொடர்பு
விஜயபாஸ்கருக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையிலான பணப்பரிமாற்றங்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான அரசு ஒப்பந்தங்கள் சுப்பிரமணியத்துக்கு கைமாறியது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தன. விஜயபாஸ்கரின் கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சுப்பிரமணியன் கவனித்து வந்ததாக கூறுப்படுகிறது. விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களிலும் சுப்பிரமணியன் பின்புலமாக இருந்து வந்தார்.
தொடரும் மே மாத மர்ம மரணங்கள்
இந்நிலையில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பிய நேரத்தில் சுப்பிரமணியனுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை வளையத்தில் சிக்கினார். இந்த சூழலில் மோகனூரில் உள்ள அவரது தோட்டத்தில் அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். ஸ்டாலின் நண்பர் மர்ம மரணமடைந்தது 2001 மே மாதத்தில்தான். அதேபோல சாதிக்பாட்சாவின் மரணமும் மே மாதத்தில் நிகழ்ந்தது. இதே போல சுப்ரமணியத்தின் மரணம் மே மாதத்தில் மர்மமான முறையில் அமைந்துள்ளது.