தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சுற்றி சுழலும் சூறாவளி சர்ச்சைகள்.. மர்ம மரணங்கள்
திருப்பூர் தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்ப மரணங்கள் சர்ச்சையாகவே உள்ளன.
Recommended Video
திருப்பூர்: கடத்தி கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் சிவமூர்த்தியின் குடும்பம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
சிவமூர்த்தியின் மாமியார் பத்மினி திருப்பூர் ஹோட்டல் அபகரிப்பு வழக்கில் சிக்கியவர். டாக்டர் கதிர்வேல் என்பவர் தமக்கு சொந்தமான திருப்பூர் 'கம்பர்ட் இன்' ஹோட்டலை பத்மினி அபகரித்துவிட்டதாக 2007-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமது ஹோட்டலை மீட்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கதிர்வேல் வழக்கும் தொடர்ந்தார்.
அதாவது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கதிர்வேல் ரூ.2 கோடியே 50 லட்சம் கடன் பாக்கி வைத்திருந்தார். அதை வாராக்கடனாக அறிவித்து ஹோட்டலை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்தது. ஏலத்தை தவிர்க்க கதிர்வேல் ரூ.64 லட்சம் செலுத்தியதும், ஏலத்தை கைவிடுவதாக வங்கி நிர்வாகம் பின்னர் கூறியது. ஆனால், போலியாக ஏலம் நடத்தி, ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த ஹோட்டலை வெறும் ரூ.4 கோடியே 50 லட்சத்துக்கு பத்மினிக்கு ஐஓபி வங்கி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது. இதுதான் டாக்டர் கதிர்வேல் வழக்கின் மனு விவரம்.
இதை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் டாக்டர் கதிர்வேல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த நிலையில் சிவமூர்த்தியின் மாமியார் பத்மினி திடீரென மரணமடைந்தார். இதுவும் அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பத்மினியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
தற்போது சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கேட்டு கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிவமூர்த்தி பின்னலாடை தொழிற்சாலை விவகாரம் ஒன்றுதான் இதன் பின்னணி எனவும் சில தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
மாமியார் பத்மினி மரணம் போல மருமகன் சிவமூர்த்தி மரணமும் மர்மமான ஒன்றாகிவிட்டது.