பொள்ளாச்சி ரயில் நிலைய தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு.. ரயிலை நிறுத்தி போலீசார் ஆய்வு
தண்டவாளத்தில் மர்மபொருள் ஒன்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலானது, பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோயில் அருகே மதியம் 12.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. ரயில்நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வந்தபோது, 4வது பெட்டியின் கீழ் மர்ம பொருள் ஒன்று டமார் என வெடித்தது.
ஆனால் ஓட்டுனர் ரெயிலை நிறுத்தாமல் பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு ஓட்டி வந்துவிட்டார். தண்டவாளத்தில் வெடிசத்தம் குறித்து உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த ரயில்வே போலீசார் 4-வது பெட்டியின் அருகே ஆய்வு நடத்தினர். அந்த இடத்தில் பால்ட்ரஸ் எனப்படும் சிறிய இரும்பு குண்டுகள் இருந்ததை கண்டெடுத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் ரயில் கிளம்பியபிறகு மர்ம பொருள் வெடித்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் மர்மபொருள் வெடித்ததால் பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அனைவரும் பதட்டமடைந்தனர்.