ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. ஜெ. மரணம் குறித்து மோடிக்கு கவுதமி கடிதம் எழுதினாரா?
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க கோரி பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியது உண்மையா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடிதத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் ஷேர்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக நடிகை கவுதமி கூறியிருந்தார். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அப்படி ஒரு கடிதமே பிரதமர் மோடி அலுவலகத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த கோரியும் தாம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என தம்முடைய ப்ளாக்கில் நடிகை கவுதமி குறிப்பிட்டிருந்தார். இதை பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டிருந்தார்.
தற்போது அப்படி ஒரு கடிதம் மோடிக்கு அனுப்பப்பட்டதா? என்பது குறித்த சந்தேகம் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக Deepak P B என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
என்னாது கௌதமி கடிதம் மோடிக்கு கிடைக்கலையா ?
டிசம்பர் 11 ஆம் தேதி நடிகை கௌதமி அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரண்த்தில் நிலவும் மர்மங்கள் குறித்து கேள்வியெழுப்பி கடிதம் எழுதியதாக தனது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார். ஊடகங்களும் அதனை செய்தியாக வெளியிட்டது. கடித நகலும் கொடுக்கப்பட்டது.
உண்மையில் கடிதம் அனுப்பபட்டதா என்று தெரிந்துக்கொள்ள 12.12.2016 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தங்கள் அலுவலகத்திற்கு நடிகை கௌதமி அவர்கள் அனுப்பிய கடித நகல் கோரி மனு செய்யப்பட்டது.
இதற்கு 27.1.2017 தேதியிட்ட கடிதம் மூலம் NO INFORMATION AVAILABLE ON RECORDS என்று பதிலளித்துள்ளனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். இதன் மூலம் கௌதமி கூறியது பொய் என்று தெரிகிறது.
தவறான முகவரிக்கு கடிதம் அனுப்பினார்களா அல்லது வெட்டி விளம்பரத்திற்கு செய்தாரா என்பது அவரவர் பார்வைக்கு.
பிரதமருக்கு கடிதம் எழுதினேன் கடிதம் எழுதினேன் என்று தம்பட்டம் அடிக்கும் க்ரூப் எல்லாம் இப்படி தானோ? எந்த நாட்டு பிரதமருக்கு அனுப்பினாங்கனு ஊடககாரங்க கொஞ்சம் கேட்டு சொல்லங்கப்பா...
இவ்வாறு அந்த பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.