திண்டுக்கல் அருகே வானில் தொடரும் பயங்கர சப்தம்? குட்டி விமானங்கள் மூலம் கனிம வள ஆய்வா?
திண்டுக்கல் அருகே குட்டி விமானங்கள் மிக தாழ்வாக பயங்கர சப்தத்துடன் தொடர்ந்து பறப்பதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் திடீர் திடீரென பயங்கரமான சப்தத்துடன் தாழப் பறந்து செல்லும் குட்டி விமானங்களால் தொடர்ந்து மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வேடசந்தூர் சுற்றுவட்டாரங்களில் சில நாட்களுக்கு முன்னர் பயங்கர சப்தம் கேட்டது. இது என்ன சப்தம் என தெரியாமல் பொதுமக்கள் குழம்பி போயினர்.
இதேபோல் கிராமங்களை அதிர வைக்கும் வகையில் குட்டி விமானங்கள் திடீரென பறந்து செல்வதாகவும் அதனால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் கூட புகார் கிளம்பியது.
அதேநேரத்தில் ரெங்கமலை பகுதியில் கனிம ஆய்வுகளுக்காகத்தான் இத்தகைய விமானங்கள் பறக்கவிடப்படுகின்றன என்கிற கருத்தும் நிலவியது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் ரெங்கமலை பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் வானில் பறந்து செல்வது என்ன என்பதுதான் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் தீவிரமாக விவாதிக்கபட்டு வருகிறது.