கொடநாட்டில் ராவோடு ராவாக, ஆவணங்களை ஆட்டய போட்டது உளவு அமைப்பா? திடுக் தகவல்கள்
கொடநாடு பங்களா கொலை வழக்கில் மர்மங்கள் விலகாத நிலையில் அதிமுகவின் ஆவணங்களை கைப்பற்றுவதற்காக உளவுஅமைப்புகளின் தலையீடுகள் இதில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையை அரங்கேற்றியது உளவு அமைப்புகளின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு சொகுசு பங்களாவில் கடந்த 24ம் தேதி நடைபெறற காவலாளி கொலை சம்பவம் ஒரு பக்கம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மற்றொருபுறம் முக்கிய குற்றவாளி எனக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஒட்டுனர் என்று சொல்லப்படும் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கனகராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விபத்து நடந்த இடத்தில் நேரில் பார்த்த போது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை என்பது தெளிவாக இருப்பதாகவும் கனகராஜின் சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தின் உண்மைதன்மை குறித்து அறிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெ. வாட்சுகள்
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி சயானும் பாலக்காடு அருகே விபத்தில் சிக்கியதாகவும், இந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை பலியாகிவிட சயான் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது, மேலும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்திய 5 வாட்சுகள் மற்றும் பளிங்கு பொம்மை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகம்
சகல வசதிகளும் நிறைந்த கொடநாடு சொகுசு பங்களாவில் ஏராளமான ஆவணங்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் 5 வாட்சுகள் மற்றும் அலங்காரப் பொருள் மட்டுமே திருடப்பட்டிருப்பதாகக் கூறுவதை நம்ப முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே கொலை மற்றும் கொள்ளை குறித்து நீதி விசாரணையோ அல்லது சிபிஐ விசாரணையோ தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
ஆவணம் தேடி
மத்திய அரசின் 'ரா' உளவு அமைப்பு அதிமுகவை பலவீனப்படுத்துவதற்கான ஆவணங்கள் ஏதேனும் கொடநாடு பங்களாவில் உள்ளதா என்றும் அவற்றை எடுப்பதற்கான முயற்சியாகத் தான் இந்த கொள்ளையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மற்றொருபுறம் வெளிநாட்டு உளவு அமைப்புகள் ஏதேனும் இந்த கொள்ளைச் சம்பவ பின்னணியில் உள்ளனவா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
உளவு அமைப்புகள் பாணி
உளவு அமைப்புகள் ஒருவர் தொடர்பான ஆவணங்களை எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போது, காரியம் முடிந்தவுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் கதையை முடித்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று கொடநாடு கொள்ளை விவகாரத்தில் என்ன பொருள் கொள்ளைபோனது என்று யாருக்குமே தெரியாத நிலையில், முக்கிய குற்றவாளி என்று சொல்லப்பட்ட கனகராஜ் விபத்தில் பலியாகியுள்ளார், மற்றொரு குற்றவாளியும் விபத்தில் சிக்கியுள்ளார் என்பவை சந்தேகங்களை வலுவாக்குவதாக சொல்லப்படுகிறது.