கொடநாடுவைத் தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் மர்ம எலும்புக் கூடு- கொலையாளி யார்? போலீஸ் திணறல்
கொடநாடுவைத் தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் எலும்புக் கூடு கிடைத்த நிலையில் கொலையாளி யாராக இருக்கும் என போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேடைப் போலவே தற்போது சிறுதாவூர் பங்களாவும் மர்ம தேசமாகிவிட்டது. சிறுதாவூர் பங்களா அருகே கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடு தொடர்பாக துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ் சேலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மூடி மறைப்பு
அதேபோல் மற்றொரு குற்றவாளியான சயான் குடும்பத்தினரை கொல்ல முயற்சி நடந்தது. இதில் சயான் மட்டுமே உயிர் தப்பினார். அவரது மனைவியும் குழந்தையும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பலரை கைது செய்த போலீசார், கை கடிகாரங்களுக்காக திருட்டு நடந்தது என மூடி மறைத்தேவிட்டனர்.
தீ விபத்து
இதேபோல் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பெரும் பீதி ஏற்பட்டது. அங்கு முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
எலும்புக் கூடு
இந்நிலையில் சிறுதாவூர் பங்களா அருகே மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
யாருடையது?
சிறுதாவூர் பங்களாவுக்கு மிக அருகேதான் இந்த எலும்புக் கூடு சிக்கியுள்ளது. நிச்சயம் இது சிறுதாவூர் பங்களாவில் இருந்த ஒருவருடையதாகவே கருதப்படுகிறது. அந்த பங்களாவைச் சுற்றிய பகுதியில் எந்த குடியிருப்பும் இல்லை.
கொலையாளி யார்?
ஆகையால் இது கொலையாகத்தான் இருக்கும் என போலீசார் கூறுகின்றனர். சிறுதாவூரில் யாரை யார் கொலை செய்தது? எதற்காக இந்த கொலை நடந்தது? என கேள்வி மேல் கேள்வி எழுவதால் விழிபிதுங்கியுள்ளது போலீஸ்.